புதுடில்லி, டிச. 28- திடீர் உடல் நலக்குறைவால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேனாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று முன் தினம் உயிரிழந்தார்.
பிரதமர் மோடி
இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டில்லியில் உள்ள அவரது வீட்டில் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், மன்மோகன் சிங்கின் உடல் இன்று (28.12.2024) காலை 8 மணிக்கு அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது உடல் பொதுமக்கள் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது.
அதன்பின்னர்,ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் உள்ள மயானத்தில் ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் எரியூட்டப்பட்டது.