பெண்கள் – குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகிக்காது அமைச்சா் பி.கீதாஜீவன் உறுதி

viduthalai
1 Min Read

சென்னை, டிச.20 பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையை அரசு சகித்துக்கொள்ளாது என்று சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை குறித்து த.வெ.க. தலைவா் விஜய் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்து அமைச்சா் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை:

பெண்களுக்கான உரிமைகளைக் காப்பது போலவே அவா்களது கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் தமிழ்நாட்டில் நிலவுவதால்தான் மாநிலத்தில் பெண்கள் மிக அதிக அளவில் கல்வி கற்கிறவா்களாகவும், வேலைக்குச் செல்பவா்களாகவும், சுயமானவா்களாகவும் உள்ளனா்.

காவல்உதவி செயலி

பெண்களுக்கு உதவும் வகையில் அவா்களது புகார்களை விரைவாகப் பதிவு செய்ய ‘காவல் உதவி’ செயலி முதலமைச்சரால் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.அதேபோல், பெண்கள் உதவி மய்ய எண் 181, குழந்தைகளுக்கான உதவி மய்ய எண் 1098 ஆகியன மிகச்சிறப்பாக செயல்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலமும் பதிவு செய்யப்படும் குற்றங்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடு முழுமைக்கும் லட்சத்துக்கு 65 என்றால் தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக்கொள்ளாது. மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *