[பாஜக அரசு பல சட்டங்களை குதர்க்கமாக திருத்தி, சமஸ்கிருதப் பெயர்களாக மாற்றி வருகிறது. எதிர்கட்சி எம்.பிக்களின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், சமூக நீதியின் குரலாக ஒளிரும் அரசமைப்புச் சட்டத்தின் மீது, ஸநாதனத்தின் குறியீடான சமஸ்கிருதத் திணிப்பு நடப்பது குறித்து அலசுகிறார் நீதிபதி அரிபரந்தாமன்]
நூற்றாண்டு பழமையான விமானச் சட்டத்திற்குப் பதிலாக ஒட்டுமொத்த விமான போக்குவரத்து விதிமுறைகளை மாற்றி, பாரதீய வாயுயான் விதேயக், 2024அய் ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார்.
மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை தூக்கி எறிவது ஒன்றும் புதிதல்ல.
சமஸ்கிருதப் பெயர்கள்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இது டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறும். இதில், எதிர்க்கட்சிகள் அதானியின் மெகா மோசடிகள், மணிப்பூர் படுகொலைகள், பெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தியதை புறக்கணித்து வக்பு சட்டத் திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று தெரிய வருகிறது. இவை பெரும்பாலும் சமஸ்கிருதப் பெயர்களாக மாற்றப்பட்டு அறிமுகமாகின்றன.
5-12-2024 அன்று நாடாளுமன்றம் விமான சட்டத்தை நீக்கி (Aircraft Act ), அதற்கு பதிலாக பாரதிய வாயுயண் விதேயக் என்று ஹிந்தி சமஸ்கிருத பெயர் கொண்ட மாற்றுச் சட்டத்தை நாடாளுமன்றம். இயற்றியிருப்பதை திமுகவின் கனிமொழி (மறைந்த என்.வி.என். சோமுவின் மகள்), திரிணாமுல் காங்கிரசின் சகாரிக்கா கோஷ், ஜெகன்மோகன் ரெட்டி கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜான் பிரிட்டோ என பல எதிர்க்கட்சி மாநிலங்களவை உறுப்பினர்களும் கடுமையாக கண்டித்துள்ளனர்.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சையது நாசிர் உசைன் அவர்கள், இந்திய மக்கள் தொகையில் 60% மக்கள் ஹிந்தி பேசாத மக்கள் என்றும், மேலும், இந்த மக்களுக்கு இந்த சட்டத்தின் பெயரைச் சொல்வதே சிரமமாக உள்ளது என்றும் , இச்செயல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 348(1)(b)-க்கு விரோதமானது என்றும் மிக விரிவாக சுட்டிக்காட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை காப்பாற்றத் தான் இந்த சட்டத்திற்கு ஹிந்தி- சமஸ்கிருத பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று பாஜக பதில் கூறியுள்ளது மாநிலங்களவையில் மேலும் எதிர்க்கட்சியினர் பிரிட்டிஷ் காலனி ஆதிக்க மனோபாவத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர் பாஜகவினர்.
இந்தியாவின் ஆட்சி மொழி பற்றி அரசமைப்புச் சட்டத்தின் பகுதி XVII கூறுகிறது. இந்தப் பகுதியில் பிரிவுகள் 343 முதல் 351 வரை உள்ளது.
இந்தியாவின் ஆட்சி மொழி ஹிந்தி என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 343 கூறுகிறது. அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது முதல் 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என்று இதே பிரிவு கூறுகிறது. 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தேவைப்பட்டால், நாடாளுமன்றம் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக நீட்டித்து சட்டம் இயற்றலாம் என்று இதே பிரிவு –அதாவது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 343 —கூறுகிறது.
அரசமைப்புச் சட்டம் தரும் இந்த அதிகாரத்தின் அடிப்படையில் தான், 1965 ஆம் ஆண்டில் ஆங்கிலம் அகற்றப்பட்டு, முழுக்க முழுக்க இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலான காங்கிரசின் ஒன்றிய அரசு முனைந்தது.
மொழிப்போர்
எனவே தான், ஹிந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு கொதித்து எழுந்தது. ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் உயிர் தியாகம் செய்தனர் .உலகில் வேறு எந்த நாட்டிலும் மொழிப்போரில் இவ்வளவு பேர் மாண்டது கிடையாது.
ஹிந்தி மொழிக்கு ஆட்சிமொழி என்ற அந்தஸ்தை தருகிறது அரசமைப்புச் சட்டம். அரசமைப்புச் சட்டத்தின் பகுதி XVII ஹிந்தி மொழியை மட்டும் வளர்ப்பதைப் பற்றி பேசுகிறது. எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 343-அய் கொளுத்தியது தி.மு.க என்பதும் அதனால், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்தனர் என்பதும் வரலாறு.
ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 348 (1)(a) உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று உறுதிபட கூறுகிறது. இதைப் பற்றி இந்த கட்டுரை பேசவில்லை. அதற்கு ஒரு தனி கட்டுரை தேவை.
திருத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்குரைஞர்கள் அதே போல, அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 348 (1)(b), (i) நாடாளுமன்றத்தில் அல்லது மாநில சட்டமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள், (ii) பாராளுமன்றத்தில் அல்லது மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்கள்,
(iii) நாடாளுமன்றமோ அல்லது மாநில சட்டமன்றங்களோ அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கும் உத்தரவுகள், விதிமுறைகள் ,துணை விதிகள் (orders,rules, regulations, bye- laws) என அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 348 (1)(b) கூறுகிறது.
ஹிந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை கொள்கை யாக கொண்டுள்ள மோடி அரசு, நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அச்சட்டங்களின் பெயர்களை ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் வைக்கிறது.
ஏற்ெகனவே, அமலில் இருந்த 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், 1973 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1872 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்றையும் நீக்கி, அதற்கு பதிலாக புதிய 3 சட்டங்களை உருவாக்கியது மோடி அரசு. அப்படி உருவாக்கிய அந்த 3 சட்டங்களுக்கும் ஹிந்தி-சமஸ்கிருத பெயர்களை வைத்தது மோடி அரசு.
அதாவது, இந்திய தண்டனை சட்டத்திற்கு பதில் கொண்டுவரப்பட்ட சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா;
குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட சட்டம் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா;
இந்திய சாட்சியச் சட்டத்திற்கு பதிலாக கொண்டு வரப்பட்ட சட்டம் பாரதிய சாட்சய அதிநியம்.
இந்த சட்டங்களுக்கு ஹிந்தி- சமஸ்கிருத பெயர்கள் வைத்திருப்பதை நியாயப்படுத்தியது மோடி அரசு. இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காப்பாற்ற இந்த பெயர்கள் வைக்கப்பட்டதாக பெருமை பேசிக் கொண்டது. அவர்களைப் பொறுத்தவரை ஹிந்தி -சமஸ்கிருதம் தான் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் போலும்.
உண்மைக்கு மாறானது
நம்மை ஆண்ட பிரிட்டிஷ் காலனி அரசு கொண்டு வந்த சட்டங்களை நீக்குவதை எதிர்ப் பதாக ஒரு கதையாடலை கட்டமைத்தது, பாஜக. இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. நமது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 13, பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்ட அனைத்து சட்டங்களும் செல்லும் என்று கூறுகிறது. இன்றும், நூற்றுக்கணக்கான சட்டங்கள் பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்ட சட்டங்கள் தான் நம்மை ஆட்சி செய்கிறது. சொத்து பரிவர்த்தனை சம்பந்தமான சட்டம் 1882- ஆம் ஆண்டில் போடப்பட்டது. அதேபோல இந்திய ஒப்பந்த சட்டம் 1872 போடப்பட்டது. காவல்துறை சட்டம் 1861 தான் இன்றும் நடைமுறையில் உள்ளது.
இந்த மூன்று புதிய சட்டங்களும் மிகக் கொடுமையானவை என்று தொடர் போராட்டங் களை தமிழ்நாட்டில் அனைத்து வழக்குரைஞர்களும் ஒன்றிணைந்து நடத்தி வருவது மற்றொரு செய்தி.
இயற்றப்பட்ட சட்டம் ஆங்கிலத்தில் இருந்தாலும், சட்டத்தின் பெயரை ஹிந்தி- சமஸ்கிருதத்தில் வைக்கும் பாஜகவின் செயல் ஹிந்தி -சமஸ்கிருத வெறி அன்றி வேறல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக இருந்தாலும், ஹிந்தி- சமஸ்கிருதத்தை திணிப்பேன் என்று மூர்க்கத்தனமாக இருக்கும் பாஜகவின் ஒன்றிய அரசை எதிர்ப்பதில் தமிழ்நாடு என்றும் முன்னணியில் இருக்கும்.
இன்று சட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருதத்திற்கு மாற்றப்பட்டுக் கொண்டுள்ளன என்பது மாத்திரமல்ல, அது ஸநாதனக் கண்ணோட்டங்களையும் மெல்ல,மெல்ல உள்வாங்கிக் கொண்டுள்ளது என்பது கவலையளிக்கிறது. நம்மை பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கத் தவறினால் , நாம் பாதுகாப்பற்று போய்விடுவோம்.
[கட்டுரையாளர்; அரி பரந்தாமன் ஓய்வு பெற்ற நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்]
நன்றி: ‘அறம்’ இணைய இதழ், 7.12.2024