அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை எதிர்த்த வழக்கு தள்ளுபடி உச்சநீதிமன்றம் உத்தரவு 

viduthalai
1 Min Read

புதுடில்லி, டிச.18- தமிழ்நாடு மின் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அதாவது, கடந்த 2011-2015ஆம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது போக்கு வரத்துக் கழகத்தில் நடத்துநர், ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் பணிகளை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்த நிலையில், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த செந்தில் பாலாஜிக்கு கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்கள் கழித்து தனது அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜி விலகிய நிலையில், ஜாமீனில் வெளி வந்த பிறகு மீண்டும் மின் துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தள்ளுபடி

இதற்கிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கும் போது அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளவில்லை என்றும், இதனால், ஜாமீன் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறி பாலாஜி சீனிவாசன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு, அறையில் நேற்று (17.12.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், “செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி கூறிய தீர்ப்பில் எந்தவித தவறும் இல்லை என்பதால் மறுஆய்வு செய்ய முகாந்திரம் இல்லை” என்று தெரிவித்து மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *