பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்
புதுடில்லி, டிச.17 அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நாடாளுமன்றத்தில் 2 நாட்கள் விவாதம் நடந்தது. அதில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியையும், மேனாள் பிரதமர் நேருவையும் விமர்சித்தார். மேலும் காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சி திரும்ப திரும்ப சிதைத்ததாக பிரதமர் மோடி கூறினார். இந்த நிலையில், மேனாள் பிரதமர் நேரு குறித்து பிரதமர் மோடி பேசிய கருத்துக்கு பதிலளித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது,
திரித்து கூறுவதா?
ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதத்தைத் பிரதமர் மோடி தவறாகத் திரித்துகூறி மக்களை ஏமாற்றி வருகிறார். பிரதமர் மோடி கற்பனையில் வாழ்ந்து வருகிறார், நிகழ்காலத்தில் அல்ல. நேருவுக்கு எதிரான கருத்துக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். மூவர்ணக் கொடியையும், அரசியல் சாசனத்தையும் வெறுத்தவர்கள் இப்போது காங்கிரசுக்கு பாடம் புகட்டுகிறார்கள். பிரதமர் மோடி முதல் தர பொய்யர். பாரதிய ஜனதா கட்சி இடஒதுக்கீட்டிற்கு எதிரானது; மக்கள் தொகை கணக்கெடுப்பை எதிர்க்கிறது. நாட்டைத் தவறாக வழிநடத்தி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஜனநாயகத்தை வலுப்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் அவர் செய்த சாதனைகளைப் பற்றிப் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
மதத்தின் மீதான பக்தி ஆன்மாவின் அமைதிக்கு அழைத்துச் செல்லும். ஆனால், அரசியலில் தனிநபர் வழிபாடு சீரழிவுக்கும் சர்வாதிகாரத்திற்குமே இழுத்துச் செல்லும். மோடி சர்வாதி காரியாகத் தயாராகிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
