மைசூரு, டிச. 17- பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் பெற்றோருக்கு இடையே கருத்து மோதல் வெடித்து அது நீதிமன்றம் வரை வந்த நிலையில், நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு, குழந்தைக்கு பெயர் சூட்டி, அந்த இணையரை ஒற்றுமையாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.
பிறந்து 3 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், 2021ஆம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தைக்கு ஆர்யவர்தனா என்று நீதிபதிகள் பெயர் சூட்டி யிருக்கிறார்கள். இந்தப் பெயரை பெற்றோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
குழந்தை பிறந்தது முதலே பிரிந்து வாழ்ந்து வரும் அந்த இணையர், நீதிமன்றத்தில் மாலை மாற்றி, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த மனக்கசப்பை விலக்கி, பிள்ளைக்காக ஒற்றுமையாக வாழ்வதற்கும் நீதிபதிகள் முன்னிலையில் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆர்யவர்தனாவின் தாய், குழந்தை பிறந்தது முதல் ஆதி என்று அழைத்து வந்துள்ளார். ஆனால், அதனை தந்தை ஒப்புக்கொள்ளவில்லை. தந்தையோ குழந்தைக்கு ஷனி என பெயர் சூட்ட விரும்பியிருக்கிறார்.
அது தாய்க்குப் பிடிக்கவில்லை. இதனால் குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். குழந்தைக்கும் பெயர் வைக்கவில்லை. இந்த நிலையில், குழந்தையின் தாய் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிமன்றம் தரப்பில் பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
அனைத்துப் பெயர்களையும் பெற்றோர் நிராகரித்த நிலையில், ஆர்யவர்தனா என்ற பெயரை சூட்ட இருவரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிமன்றமே குழந்தைக்கு பெயர் சூட்டியிருக்கிறது.