மக்களவையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

Viduthalai
1 Min Read

புதுடெல்லி, டிச.17 எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் இன்று (17.12.2024) தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக ஆய்வு நடத்தி ஒன்றிய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. இந்தக் குழுவினர் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் இந்தக் குழு தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையை, ஒன்றிய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான சட்ட மசோதா தயாரிக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா இன்று (17.12.2024) தாக்கல் செய்யப்பட்டது. மசோதவிற்கு ஆரம்ப நிலையிலயே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பிற்கே இந்த மசோதா எதிரானது என்று சமாஜ்வாடி நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட வாய்ப்புள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *