‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்று ஒன்றிய பி.ஜே.பி. அரசு கூறுவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதே!
மனுதர்மத்தைக் கொண்டுவரும் முயற்சியை முறியடிப்போம்!
கும்பகோணம், டிச.16 ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது – நடைமுறைக்குச் சாத்தியமில்லாதது – மனுதர்மத்தைக் கொண்டு வரும் திட்டமாகும் – இதனை முறியடிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்
நேற்று (15.12.2024) கும்பகோணத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
செய்தியாளர்களாகிய உங்களையெல்லாம் சந்திக்கின்ற நிகழ்வில், மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய அளவில், வைக்கம் வெற்றி விழா நூற்றாண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் கடந்த 12.12.2024 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நூறாண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் அவர்கள் செய்த மனித உரிமைப் போராட்டத்தினுடைய வெற்றியை இரண்டு அரசுகளும் சிறப்பாக நடத்தின. ஒரு காலத்தில் அந்த அரசு, தந்தை பெரியாரை கைது செய்து, கடுங்காவல் தண்டனை விதித்து, சிறைச்சாலைக்குள்ளே அடைத்து கல்லுடைக்க வைத்தது. இன்றைக்கு விரிந்த கேரளமாக, திருவிதாங்கூர், கொச்சி மற்ற பகுதிகள் எல்லாம் இணைந்த ஒரு கேரள மாநிலமாக இருக்கிறது.
வானவில் மறைந்துவிடும்; சூரியன் நிரந்தரமாக இருக்கும்!
செய்தியாளர்: நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: வானவில் தோற்றத்தில் அழகாகத்தான் இருக்கும்; அடிக்கடியும் தோன்றும்; சிறிது நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும். ஆனால், சூரியன் எப்பொழுதும் நிரந்தரமாக இருக்கும்.
உலகம் முழுவதும் உள்ள மக்கள்!
திரு.பினராயி விஜயன் அவர்கள் முதலமைச்சராக உள்ள அந்தக் கேரள மாநிலமும், தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசும், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் இணைந்து – இரு அரசாங்கங்களும் ஒத்துழைத்த நிலையில், தந்தை பெரியாருக்கு இதுவரை வரலாற்றில் காண முடியாத மிக அற்புதமான நூலகம், காட்சியகம், ஆடிட்டோரியம் என்று – மாநாடுகள், நிகழ்வுகள் நடத்தக் கூடிய அளவிற்கு, வைக்கம் நகரில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றதை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள்; உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொலைக்காட்சியின் வாயிலாக கண்டு களித்தார்கள்.
பெரியாருடைய கொள்கை என்பது விதை!
கலைஞர் அவர்கள், பெரியார் நினைவு சமத்துவபுரங்களை ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பாடு செய்திருந்தாலும், நாடே சமத்துவபுரமாக, ஜாதியற்ற, ஒரு பேதமற்ற, சமத்துவம் நிறைந்த, சுயமரியாதை உணர்வு ஆட்கொள்ளக்கூடிய ஒரு சமூகத்தை நிறுவவேண்டும் என்ற நோக்கத்தோடு நடைபெற்ற அந்த வைக்கம் போராட்டத்தின் வெற்றி விழாவினையொட்டி – தமிழ்நாடு முழுவதும் எழுச்சிக் கூட்டங்களை நடத்தவேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்து, வருகின்ற 24 ஆம் தேதி – டிசம்பர் 24 தந்தை பெரியார் அவர்களுடைய நினைவு நாள். அய்யா அவர்கள் உடலால் மறைந்து ஒரு அரை நூற்றாண்டுக்கு மேல் ஆனாலும், பெரியாருடைய கொள்கை என்பது இருக்கிறதே, அது ஒரு விதை.
விதைத்தவர்கள் இருக்கிறார்களா என்பதைவிட, விதை நெல் கிளம்பி, அது காலங்காலமாக மற்றவர்க ளுடைய பசியைப் போக்குவதைப்போல – சுயமரி யாதைப் பசியை, அறிவுப் பசியை, உணர்வுப் பசியை, ஜாதி ஒழிப்பு என்ற பசியை போக்கக் கூடிய அளவிற்கு, உணவாக அமைந்து – சுயசிந்தனையை வளர்த்துக் கொள்வதற்கு வாய்ப்பாகவும் அமைந்ததுதான் தந்தை பெரியாரது கொள்கை.
தந்தை பெரியார் நினைவு நாளான டிச.24 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்தில் 100 கூட்டங்கள்!
அதன்படி, அந்த வெற்றி விழா கூட்டங்களை வருகின்ற 24 ஆம் தேதி முதல் தொடங்கி, ஒரு வாரத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய முக்கிய நகரங்கள், பேரூர்கள், சிற்றூர்களில் 100-க்கும் மேலான கூட்டங்களை – தோழமைக் கட்சிகளையும் அழைத்து, நல்ல அளவிற்கு இந்த வெற்றி விழாக் கூட்டங்களை – ஜாதி ஒழிப்பை, தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தக் கூடிய திட்டங்களை அமைத்து நடத்துவது என்று திராவிடர் கழகம் முடிவு செய்திருக்கிறது.
தீண்டாமைக் கொடுமை இன்னமும் ஒழியவில்லை. பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அவற்றையெல்லாம் அரசு சட்டங்கள் மூலமாக மட்டுமே ஒழித்துவிட முடியாது. சமூகத்தினுடைய விழிப்பு ணர்வும் மிகப்பெரிய அளவிற்கு வந்தால்தான் முடியும் என்பதை வலியுறுத்தக் கூடிய பிரச்சாரத்தை தீவிரமாக திராவிடர் கழகம் மேற்கொள்ளவிருக்கிறது.
செய்தியாளர்: ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவி ருக்கிறதே, அதுபற்றி உங்களுடைய கருத்து?
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை துடைத்துத் தூரப் போட்டுவிட்டார்கள்!
தமிழர் தலைவர்: ஒரு பக்கம் அரசமைப்புச் சட்டத்தின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – முகப்புரையைப் படித்துவிட்டு, நாங்கள்தான் அரசமைப்புச் சட்டக் காவலர்கள் என்று சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில், அதனுடைய முகப்புரையை துடைத்துத் தூரப்போட்டு விட்டார்கள் என்பதற்கு அடையாளம்தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதாகும்.
ஒரே ஜாதி என்று சொல்வதற்கு என்ன தயக்கம்?
சரி, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொல்கிறார்களே, ஒரே ஜாதி என்று சொல்வதற்கு என்ன தயக்கம் அவர்களுக்கு?
தேர்தலுடைய அடிப்படை என்ன?
இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். அப்படியானால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில், எடுத்த எடுப்பில், முகப்புரையில் உள்ளவை – டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கடும் முயற்சிக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும்.
அதுமட்டுமல்ல, அதைப்பற்றி உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பில், அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தில், எந்த சட்டத் திருத்தமும் செய்ய முடியாது என்று மிகத் தெளிவாக வரையறுத்து இருக்கிறார்கள்.
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையின் அய்ந்து அம்சங்கள் என்னவென்றால், Sovereign, Socialist, Secular, Democratic, Republic என்பதாகும்.
முழு இறையாண்மையுள்ள, சமதர்ம, மதச்சார்பில்லாத, ஜனநாயகக் குடியரசு.
மேற்சொன்ன அய்ந்து அம்சமும் இன்றைக்குச் சுக்கு நூறாக உடைக்கப்படுகிறது.
அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இறையாண்மைக்குப் பொருள் தருகின்ற நேரத்தில், We the People of the India…. என்று சொல்லித்தான் ஆரம்பிக்கிறார்கள்.
மக்களிடம்தான் இறையாண்மை உள்ளது!
இந்திய மக்களாகிய நாம், நமக்கு நாமே வழங்கிக் கொள்வது என்று சொல்லும்பொழுது, அந்த இறை யாண்மை என்பது எங்கே இருக்கிறது?
குடியரசுத் தலைவரிடமா?
பிரதமரிடமா?
ஒன்றிய அமைச்சர்களிடமா?
நாடாளுமன்ற உறுப்பினர்களிடமா?
சட்டமன்ற உறுப்பினர்களிடமா? என்றால், யாரிடத்திலும் இல்லை.
We the People – மக்களிடம்தான் அந்த இறை யாண்மை உள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொன்னால், அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அதில் உள்ள ஒரு சிக்கலைச் சொல்கிறேன் – பொருளாதாரத்தை மிச்சப்படுத்துகின்றோம் என்று சொல்லி, இப்பொழுது யார், யார் நாடாளுமன்ற உறுப்பினர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் எல்லாம் ஆயுள்கால உறுப்பினர்களாக இருக்கலாம் என்று சொன்னால், அதனை ஏற்றுக்கொள்வார்களா?
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் என்பது பாசிசத்தினுடைய முகப்படாம் அணிந்த ஒன்று!
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை ஏன் கொண்டு வருகிறார்கள் என்றால், அடுத்த தேர்தல் என்பதே இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். அதுதான் அவர்களுடைய திட்டம்.
இந்தத் திட்டம் என்பது, பாசிசத்தினுடைய முகப்படாம் அணிந்த ஒன்றாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகளை அதற்காக அவர்கள் திருத்தியாக வேண்டும்.
ஊராட்சி மன்றத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டால், ஊராட்சி மன்றக் கூட்டத்தில் நம்பிக்கை இல்லா தீர்மா னம் கொண்டுவந்து, அந்தத் தலைவரை மாற்றுகிறார்கள்.
அதேபோன்று, சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் கட்சி மாறினால் என்னாகும்?
இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்கள் ஏராளம் இருக்கின்றன.
சட்டத்தில் உள்ள சிக்கல்களை எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பது அடுத்த கேள்வி.
ஜனநாயகம் என்பதற்குப் பதிலாக சர்வதிகாரம்!
ஆனால், அடிப்படையிலேயே, நான் எடுத்துச் சொன்ன முகப்புரையில் இருக்கின்ற, ‘‘ஜனநாயகக் குடியரசு” என்ற வார்த்தைக்கும், மக்களிடம் இருக்கின்ற ‘‘இறையாண்மை” என்ற தத்துவத்திற்கும் முழுக்க முழுக்க இது விரோதமானது. எனவே, ஜனநாயகம் என்பதற்குப் பதிலாக சர்வதிகாரம்!
ஹிட்லர், ரீச்ஸ்டாக் கான்ஸ்ட்டியூசன் என்று ஜெர்மனியில் கொண்டு வந்தார். அவர் ஜனநாயகப்படி தான் ஆட்சிக்கு வந்தார். ஜனநாயகப்படியே வந்த அவர், சர்வாதிகார ஆட்சியாக, தனி மனிதர் ஆட்சியாக ஆக்கினார்.
அதை நோக்கி இந்த நாடு போய்க் கொண்டிருக்கின்ற ஆபத்துதான் மறைமுகமாக அல்ல – வெளிப்படையாகத் தெரிகிறது.
மனுதர்ம ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்காகத்தான் ஒரே நாடு, ஒரே திட்டம்!
அதுவும் ஒன்றியத்தில் உள்ள பி.ஜே.பி. அரசு, முழு மெஜாரிட்டி உள்ள அரசல்ல; மைனாரிட்டி அரசுதான். இரண்டு கட்சிகளின் தயவினால், ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலிலேயே இந்த அளவிற்குத் துணிந்து வருகிறார்கள் என்று சொன்னால், முழுப் பெரும்பான்மையோடு இருந்திருந்தால் நாடு என்னாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.
எதிர்க்கட்சிகளை அவர்கள் மதிப்பதில்லை. மனுதர்ம ஆட்சியை மீண்டும் கொண்டுவருவதற்காகத்தான் ஒரே நாடு, ஒரே திட்டம் என்கிற ஏற்பாடு.
அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஜன நாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் யாராக இருந்தாலும், அதைக் கண்டிக்கவேண்டும்; கண்டிப்பதற்காக ஓரணியில் திரளவேண்டும்.
எனவே, ஜனநாயகமா? சர்வாதிகாரமா? அதற்கு வேண்டிய முகப்பு வாயிலில் நாம் நுழையப் போகிறோம் என்பதற்கு அடையாளம்தான், இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல்.
கட்சி மாறுகின்ற சட்டத்தையே இன்னும் தெளிவாக்கவில்லை!
செய்தியாளர்: கலைஞர் அவர்கள் ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல்பற்றி கூறியிருக்கி றாரா?
தமிழர் தலைவர்: அரசியலில் அடிக்கடி கட்சி மாறு வதால், அடிக்கடி தேர்தல் வரக்கூடிய சூழல். கட்சி மாறுகின்ற சட்டத்தையே இன்னும் தெளிவாக்க வில்லையே!
ஆகவேதான், பல காலகட்டங்களில் அரசியலில், அந்தக் நேரத்தில் என்ன சூழ்நிலையோ, அதற்கெனச் சொல்வார்கள்.
ஆகவே, ‘‘கலைஞர் சொன்னார், கலைஞர் சொன்னார்” என்று சொல்வது சரியல்ல. கலைஞர் சொன்ன ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.
அடிப்படைக் கொள்கைகள்தான் மாறக்கூடாதவை!
பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பொழுது, காங்கிரஸ் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்தார்.
அந்தக் காலகட்டத்தை வைத்து, ‘‘பெரியார் காங்கிர சைத்தான் ஆதரித்தார், ஆதரித்தார்” என்று இப்பொழுது சொல்ல முடியாது.
அந்தந்த காலகட்டத்தில் எது தேவையோ, அதைத்தான் செய்வார்கள்.
வெயில் காலத்தில், சுவெட்டர் போடமாட்டோம்; ஆனால், குளிர்காலத்தில் சுவட்டர் போடுவோம்; ஏன், அப்பொழுது சுவெட்டர் போட்டீர்களே, இப்பொழுது போடவில்லையே என்று கேட்கக்கூடாது.
அவ்வப்பொழுது என்னென்ன தேவையோ – அதுபோன்றுதான் திட்டங்கள். அடிப்படைக் கொள்கைகள்தான் மாறக்கூடாதவை.
அடிப்படைக் கொள்கைக்கு ஆங்கிலத்தில் Principle என்று பெயர். திட்டங்களுக்கு Policies என்று பெயர்.
அடிப்படைக் கொள்கைகள் மாறாதவை; அவற்றைக் கொண்டு போய்ச் சேர்க்கின்ற வழிகள் அடிக்கடி மாறும்.
திடீரென்று மழை பெய்தால், அந்தப் பாதையை தவிர்த்துவிட்டு, மாற்றுப் பாதையில் செல்கிறோம். அதுபோல, அரசியலில் மழைகள் உண்டு, புயல்கள் உண்டு.
கலைஞரிடம் அந்தக் காலகட்டத்திற்குரிய, தேவைப்பட்ட ஒரு கருத்தைக் கேட்டிருப்பார்கள்; அதற்காக அவர் அப்படி சொல்லியிருப்பார்.
இது முரண்பாடு அல்ல; அறிவு வளர்ச்சியைப் பொறுத்தது.
ராகுல் காந்தி அவர்கள் அழகாகவும் தெளிவாகவும் சுட்டிக்காட்டியுள்ளபடி, முதலில், உத்தப்பிரதேசம்தான் மனுதர்மப்படி ஆட்சி வந்தால், எப்படி இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு – ஹிந்துத்துவா கொள்கை யினுடைய அரசியல் பரிசோதனைக் கூடமாக அது இருக்கிறது. அங்கே மனுதர்மப்படி ஆட்சி நடக்கிறது – அதன் விளைவை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் காட்டி னார்கள்; அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தல்க ளிலும் காட்டியிருக்கிறார்கள்.
அவர்களுடைய பலமே, எதிர்க்கட்சிகளுடைய பலவீனம்தான்!
இப்பொழுது அவர்களுடைய பலமே, எதிர்க்கட்சி களுடைய பலவீனம்தான் – அவர்களுடைய பலமாக இருக்கின்றது.
எதிர்க்கட்சிகளுடைய ஒற்றுமையின்மைதான் அவர்களுக்குப் பலமாக இருக்கிறது.
சிலரை விலைக்கு வாங்குகிறார்கள்; கட்சிகளை உடைக்கிறார்கள்.
‘‘வென்றாலும், தோற்றாலும் நாங்கள்” என்கிற ஒரு புதிய ஜனநாயகத் தத்துவத்தை – ஒன்றிய
ஆர்.எஸ்.எஸ். ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி செய்திருக்கிறது.
அதற்கான அவர்களுடைய பரிசோதனைக் கூடம்தான் உத்தரப்பிரதேசம்.
ஜாதியே கூடாது என்று சொல்வார்கள்; உடனே, நாங்கள் எல்லோரும் ‘‘மெஜாரிட்டி, மெஜாரிட்டி என்று சொல்லி, முஸ்லிம்களே கூடாது” என்று சொல்வார்கள்.
பலமுறை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது!
உத்தரப்பிரதேசத்தில் நடக்கக் கூடிய கொடுமை களைக் கண்டித்து உச்சநீதிமன்றம் பலமுறை தீர்ப்பளித்திருக்கிறது.
அதனால்தான், 1947 ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டப்படி, மசூதிகளையோ, கோவில்களையோ, வழிபாட்டுத் தலங்களை மாற்றுவதோ, புதிய வழக்கு களைப் போடுவதே கூடாது என்று உச்சநீதிமன்றம் அண்மையில் ஒரு தனிப் பிரிவை உருவாக்கி, நீதிபதிகள் விசாரிக்கக் கூடிய அளவிற்கு செய்திருக்கிறார்கள். தடை உத்தரவையும் பிறப்பித்திருக்கிறார்கள். அந்தத் தடை உத்தரவு, மற்ற இடங்களுக்கு என்று சொல்வதைவிட, யாரை மனதிலே கொண்டிருக்கிறது என்றால், உத்தரப்பிர தேசத்தைத்தான் மனதிலே கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றம்தான்
கடைசி நம்பிக்கையாகும்!
அங்கேதான் இந்த வித்தைகள் எல்லாம் நடக்கின்றன. இவை அத்தனைக்கும் உச்சநீதிமன்றம்தான் கடைசி நம்பிக்கையாகும்.
அந்த உச்சநீதிமன்றம் எந்த அளவிற்குச் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பது எதிர்கால கேள்விக்குறி யாகும். நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.