புதுடில்லி, டிச.7 தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கணவரிடமிருந்து விவாகரத்து கோரும் நிலையில்,தாழ்த்தப்பட்ட சமூகம் அல்லாத அவரின் மனைவியின் பராமரிப்பில் வளரும் அவர்களது குழந்தைகளுக்கு எஸ்சி ஜாதிச் சான்றிதழை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். ஜுஹி போரியா நீ ஜவால்கர் மற்றும் பிரதீப் போரியா இணையர் விவாகரத்து கோரி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குநீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு 5.12.2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சாராத பெண், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்வ தன் மூலமாக அவர் அந்த உரிமையை கோர முடியாது. பிறப்பால் ஜாதி தீர்மா னிக்கப்படுகிறது என்பதில் எந்த சர்ச்சையும் இருக்க முடியாது என்பதை இந்த நீதி மன்றம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளாக அவர்களது 11 வயது மகன் மற்றும் 6 வயது மகள் ராய்பூரில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகம் அல்லாத அவர்களது அம்மாவின் பெற்றோர் வீட்டில் வளர்ந்து வருகின்றனர். எனவே அவர்களது அப்பா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் என்பதால் அவர்களுக்கான உரிமையை அந்த தம்பதியினர் விவாகரத்து பெற்றாலும் மறுக்க முடியாது.
எனவே, அந்த இணையருக்கு விவாகரத்து வழங்கப்படுவதுடன், தாழ்த்தப்பட்ட சமூகம் அல்லாத மனைவியின் வீட்டில் வசிக்கும் அவரின் பிள்ளைகளுக்கு எஸ்சி ஜாதிச் சான்றிதழை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 6 மாதங்களுக்குள் வழங்க உத்தரவிடப்படுகிறது. குழந்தைகளின் படிப்பு வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு 142 சட்டப் பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. மேலும், குழந்தைகள் வளரும் வரை அவர்களது படிப்பு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அவரது தந்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.