புதுடில்லி, டிச.5 முதலமைச்சராக இருந்தபோது, மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க தனக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் டில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டப் பேரவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் அதானி தொடர்புடைய குற்றச்சாட்டை மேனாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (4.12.2024) முன்வைத்துள்ளார்.
சவால்
சட்டப்பேரவையில் கெஜ்ரிவால் பேசியதாவது “நான் முதலமைச்சராக இருந்தபோது, டில்லி மின் உற்பத்தி நிலையங்களை அதானிக்கு ஒப்படைக்க அழுத்தம் கொடுத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். சிறைக்கு சென்றதற்கு அதுவும் காரணமாக இருக்கக்கூடும் என்று நான் எண்ணினேன்.ஆட்சிக்கு வந்தால் அதானிக்கு மின் உற்பத்தி நிலையங்களை கொடுக்க மாட்டோம் என்று பாஜக அறிவிக்க வேண்டும் என்று நான் சவால் விடுகிறேன்.
டில்லியில் பெருமளவில் வாக்கு களை குறைக்கும் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாள்கள் காத்திருங்கள். நான் அவர்களை அம்பலப்படுத்துகிறேன். மகாராட்டிரம் மற்றும் அரியானாவில் பாஜக எப்படி வெற்றி பெற்றது என்பதை நாட்டு மக்களுக்கு நான் சொல்கிறேன். நீங்கள் நேர்மையாக தேர்தலில் வெற்றி பெறவில்லை” எனத் தெரிவித்தார்.
ஏற்கெனவே, நாட்டில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிர்மான நிறுவன அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலா் (சுமார் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.