புதுடில்லி, டிச.4 ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்துள்ள தகவல்களின்படி, நவ. 27ஆம் தேதி வரை ஒன்றிய அரசு இந்த நிதி யாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு ரூபாயைக் கூட விடுவிக்கவில்லை. மாறாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் மட்டும் ரூ.276.10 கோடி விடுவித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது
பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. புதுச்சேரியும் வெள்ளக்காடாக மாறியது. யாரும் பெரிதும் எதிர்பார்க்காத விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக திருவண்ணாமலையில் மண்சரிவு காரணமாக தீப மலையில் இருந்து வெள்ளத்துடன் பாறைகள் உருண்டோடி வந்து ஒரு வீட்டின் மீது விழுந்தன. அந்த வீட்டில் இருந்த 7 பேரும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் சுமார் 36 மணிநேரத்திற்கும் மேலாகப் போராடி மீட்கப்பட்டன. இன்னும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு 02.12.2024 அன்று கடிதம் எழுதியிருந்தார்.
தமிழ்நாட்டில்
14 மாவட்டங்கள் பாதிப்பு
அதில் பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை தற்காலிகமாக சீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார். நேற்று (3.12.2024) மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தமிழ்நாட்டுக்கு உடனடியாக நிவாரண நிதியை விடுவிக்கும்படி கோரிக்கை வைத்தனர்.
கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள்
இந்நிலையில், மாநில பேரிடர் நிவா ரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு இந்த நிதியாண்டில் ஒன்றிய அரசு ஒரு ரூபாயைக் கூட ஒதுக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டின் மாநில பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு குறித்து கம்யூனிஸ்ட் எம்.பி.,க்கள் சுப்பராயன், செல்வராஜ் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்திருந்தார்.
அதன்படி, நடப்பு 2024-2025 நிதியாண்டில் தமிழ்நாடு மாநிலப் பேரிடர் நிவாரண நிதிக்கு சுமார் ரூ.1,260 கோடி ஒதுக்கப்பட வேண்டிய நிலையில், இதுவரை ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை என தெரியவந்துள்ளது. அதாவது, தேசிய பேரிடர் நிவாரண நிதி (NDRF) மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதி என இரண்டு நிதிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும்.
ஒன்றிய அரசின் பங்கு எவ்வளவு?
அதில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் (SDRF) ஒன்றிய அரசின் பங்களிப்பு மற்றும் மாநில அரசின் பங்களிப்பு என இரண்டும் உள்ளது. 2024-2025 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.944.80 கோடி, மாநில அரசின் பங்கு ரூ.315.20 கோடி என மொத்தம் ரூ.1260 கோடி ஒதுக்கப்பட வேண்டும். இந்த நிதியை ஒன்றிய அரசு இரண்டு தவணைகளாக வெளியிடும்.
தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை…
ஆனால், ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்துள்ள தகவல்களின்படி, நவ. 27ஆம் தேதி வரை ஒன்றிய அரசு இந்த நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் ஒரு பைசாக் கூட விடுவிக்கவில்லை. மாறாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் மட்டும் ரூ.276.10 கோடி விடுவித்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருக்கும் தொகையை பயன்படுத்தித்தான் மாநில அரசு தொடக்க கட்டமாக நிவாரண பணிகளை மேற்கொள்ளும். அந்த வகையில், இந்தாண்டுக்கான நிதி இதுவரை ஒதுக்கப்படாதது அரசியல் அரங்கில் பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது.
ஆந்திரா, அசாம், பீகார், மகாராட்டிரா, உத்தரப் பிரதேசம், கேரளா, இமாச்சல் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒன்றிய அரசு பெரும்பாலான தொகையை விடுவித்துள்ளது. மேலும், பெரும்பாலான மாநிலங்களுக்கு முதல் தவணை நிதியை மட்டும் ஒன்றிய அரசு வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டுக்கு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை.
முதல் தவணையும், இரண்டாம் தவணையும் ஒரு பைசா கூட ஒதுக்காதது பட்டியலில் தெரிய்வந்துள்ளது.