உ.பி. சம்பல் வன்முறை: 3 நபர் ஆணையம் நேரில் விசாரணை

viduthalai
1 Min Read

லக்னோ, டிச.3- உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடா்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட 3 உறுப்பினா்கள் கொண்ட விசாரணை ஆணையம், நிகழ்விடங்களில் 1.12.2024 அன்று நேரில் விசாரணை மேற்கொண்டது. சம்பல் பகுதியில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் பிரதானமாக இருந்ததாகவும், 1526-இல் முகலாய ஆட்சியாளா் பாபா் கோயிலின் ஒரு பகுதியை இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் ஜாமா மசூதியில் கடந்த நவ. 24-ஆம் தேதி நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வன்முறை வெடித்தது. அப்போது துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஜாமா மசூதி நிர்வாகத்தினா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் சம்பல் மாவட்ட நீதிமன்றம் தொடா்ந்து விசாரணை நடத்த கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால தடை விதித்தது. மேலும், சம்பல் பகுதியில் அமைதியை நிலைநாட்டவும் உத்தர பிரதேச அரசுக்கு வலியுறுத்தியது.இதற்கிடையே, சம்பல் வன்முறை நிகழ்வுகள் குறித்து விசாரிக்க மூன்று நபா் விசாரணை ஆணையத்தை உத்தர பிரதேச மாநில ஆளுநா் ஆனந்திபென் படேல் அறிவித்தார். சம்பல் வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதா அல்லது தற்செயலாக ஏற்பட்டதா உள்பட பல்வேறு கோணங்களில் இந்தக் குழு விசாரணை நடத்தி, அடுத்த 2 மாதங்களில் அறிக்கையை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் அரோராவும், உறுப்பினா்களாக ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி அமித் மோகன் பிரசாத், ஓய்வுபெற்ற அய்பிஎஸ் அதிகாரி அரவிந்த் குமார் ஜெயின் ஆகியோர் நியமிக்கப்பட்டனா். பலத்த பாதுகாப்புடன் அமித் மோகன் பிரசாத் தவிர மற்ற விசாரணைக் குழு உறுப்பினா்கள் சம்பலில் 1.12.2024 அன்று தங்களின் விசாரணையைத் தொடங்கினா்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *