சபரிமலை அய்யப்பன் கோவில் நடையில் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி முதல் பூஜைகள் நடைபெற்று வருகின்றனவாம். ஆந்திர மாநிலம் விஜயபுரத்தில் இருந்து வந்த முருகாச்சாரி (வயது 49) என்ற பக்தர் பம்பையில் இருந்து சன்னிதானம் நோக்கி மலையேறி சென்று கொண்டிருந்தார். அவர் நீலிமலை என்ற இடத்தைச் சென்றடைந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், அவர் அங்குள்ள இதய சிகிச்சை மய்யத்தில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகாச்சாரி மரணம் அடைந்தார். அவரது உடல் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சொந்த செலவில், அவரது சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஏற்கெனவே திருவிதாங்கூர் தேவஸ்தானம் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்தால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் காப்பீடு உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. எனவே, முருகாச்சாரி குடும்பத்திற்கு உடனடியாக ரூ.5 லட்சம் காப்பீட்டு தொகை வழங்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இறந்த பக்தருக்கு நமது அனுதாபம் – இரங்கல் உரித்தாகட்டும்! அது நமது மனிதாபிமானமாகும்!
ஒன்றை இதில் கவனித்தாகவேண்டும். விரதமிருந்து, நாள்தோறும் பூஜை செய்து, கடைசியில் சபரிமலை சென்று, 18 படிக்கட்டுகளை ஏறி, அய்யப்பனைத் தரிசிக்கவேண்டுமாம். அப்படி செய்தால்தான், செய்த பாவங்கள் எல்லாம் ஒரே நொடியில் தொலைந்து, புண்ணியம் கிடைக்கும் – வாழ்க்கையில் சுகம் கிடைக்கும் என்றுதானே சொல்லுகிறார்கள்.
‘‘சரணம் அய்யப்பா’’ என்று சென்ற பக்தர் மரணம் அடைவது ஏன்?
காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அரசுதானே மரணமடைந்த பக்தரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் கொடுக்கிறது.
‘கடவுளை மற, மனிதனை நினை’ என்பது இதுதானே – சிந்திப்பீர்!
– மயிலாடன்