கேரளத்தில் ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவை’’யொட்டி, தமிழ்நாடு அரசால் வைக்கத்தில் உள்ள தந்தை பெரியார் நினைவகம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டு, புதிய கட்டடமும் எழுப்பப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகத்தை 12.12.2024 அன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் தலைமையில், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவிருக்கிறார். தந்தை பெரியார் நூலகத்தைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவிருக்கிறார்.
மேற்கண்ட தகவலை கடந்த 26.11.2024 அன்று ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தவுடன், தோழர்கள் எழுந்து நின்று தமிழ்நாடு ‘திராவிட மாடல்‘ அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி கூறும் வகையில், கரவொலி எழுப்பி உற்சாகத்துடன் வரவேற்றனர்.
வைக்கத்தில், டிசம்பர் 12 அன்று நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கத் தமிழ்நாடு முழுவதும் தோழர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். பேருந்துகளிலும், தொடர் வண்டிகளிலும் பயணச் சீட்டு முன்பதிவை செய்து வருவதுடன், தனித்தனி வாகனங்களிலும் பயண ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.