நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20இல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

viduthalai
1 Min Read

புதுடில்லி, நவ.28- ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் அரியானா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருக்கின்ற, நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 6 இடங்களுக்கு வருகிற டிசம்பர் 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடை பெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இவற்றில் ஆந்திரப் பிரதேசத்தில், வெங்கடரமணா ராவ் மொபிதேவி, பீதா மஸ்தான் ராவ் யாதவ் மற்றும் ரியாகா கிருஷ்ணையா ஆகிய 3 பேரும் கடந்த ஆகஸ்டில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர்.

இதனால், அந்த 3 இடங்களும் காலியாக உள்ளன. இதில், யாதவ் மற்றும் கிருஷ்ணையா ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் களுக்கான பதவி காலம் 2028ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மொபிதேவியின் பதவி காலம் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி முடிகிறது.

ஒடிசாவில், பிஜு ஜனதா தள கட்சியில் இருந்து சுஜீத் குமார் வெளியேற்றப்பட்டதும் அந்த இடம் காலியாக உள்ளது. அவருடைய பதவி காலம் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதேபோன்று, மேற்கு வங்காளத்தில் பெண் மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டு, கொடூர படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், அதனை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த ஜவகர் சர்கார் கடந்த செப்டம்பரில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.
அரியானாவில் பா.ஜ.க.வை சேர்ந்த கிரிஷன் லால் பன்வார், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

இதனால், அந்த இடம் காலியாக இருக்கின்றது. இந்த சூழலில், காலியாக இருக்கின்ற இந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *