பெரியார் திரைப்படத்தில் மயிர்க் கூச்செரிய வைக்கும் ஒரு காட்சி! ஈரோடு நகர் மன்றத் தலைவராக தந்தை பெரியாரும், நகராட்சி ஆணையாளரும் பேசிக்கொள்ளும் காட்சி அது.
அதன் உரையாடல் இப்படிப் போகும்.
பெரியார்: ”நாம் போட்ட திட்டப்படிதானுங்களே வேலை நடக்குது?”
ஆணையாளர்: “அதுல ஒரு சிக்கல் இருக்குதுங்க”
பெரியார்: “அதுல என்னங்க சிக்கல்?”
ஆணையாளர்: “பைப்லைன் தாழ்த்தப்பட்டவங்க காலனி வழியாக வர்றதனால தண்ணீர் தீட்டு பட்டுடும்னு எதிர்க்கிறாங்க”
பெரியார்: “இதென்னங்க முட்டாள்தனமா இருக்குது”
ஆணையாளர்: ”உங்க அம்மாதாங்க முதல்ல எதிர்க்கிறாங்க”
பெரியார்: “எங்கம்மா எதிர்க்கிறதுனால முட்டாள்தனம் முட்டாள்தனம் இல்லேன்னு ஆயிடுங்களா? நீங்க நம்ம திட்டப்படியே முடிங்க. தாகம் எடுக்கறவங்க தண்ணீர் குடிக் கட்டும். தீட்டுப் பார்க்கிறவங்க நாக்கு வறண்டு சாகட்டும்”
எப்படி? உண்மையாகவே மயிர்க்கூச்செரிகிறதல்லவா? இந்த உரையாடல் நடந்த காலம் 1919 களில். ஒரு நூற்றாண்டுக்கும் முன்பு. அப்போது பெரியார் அரசியலுக்கு வராத காலம். “அம்மாவாக இருந்தாலும் சரி, தீட்டுப் பார்க்கிறவர்கள் நாக்கு வறண்டு செத்தாலும் சரி, எனக்கு ஜாதி ஒழிய வேண்டும். மனிதர்களுக்குள் சம நுகர்ச்சி வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்” என்ற தணியாத ஜாதி ஒழிப்புத் தாகம் பெரியாருக்கு. அந்த தாகம் 105 ஆண்டுகளுக்குப் பின்பும் அன்று பயன்பட்டது போலவே இன்றும் முழுமையாக பயன்பட்டுக்கொண்டு இருக்கிறது.
பெரியார் கட்டியது என்னவோ தண்ணீர் தொட்டிதான். ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் அதை ”பெரியார் கோட்டை” என்று அழைப்பதாக சொல்கிறார் அந்த தண்ணீர் தொட்டிப் பணியாளர் தீனதயாளன். ”இதிலிருந்து ஒரு கல்லைக்கூட இன்னிக்கும் அசைக்க முடியாதுங்க” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் மற்றொரு பணியாளர் நம்பிராஜன். 105 ஆண்டுகளுக்கு முன்பு இப்போதிருக்கும் எந்த பொறியியல் வசதியும் இல்லாத காலத்திலேயே வியக்கத்தக்க வகையில் இது கட்டப்பட்டிருக்கிறது. செவ்வக வடிவத்தில் அமைந்துள்ள கோட்டை வடிவிலான இந்த தண்ணீர் தொட்டி பார்த்தால் தண்ணீர் தொட்டி போலத் தெரியாது. சொல்லியே ஆக வேண்டும். பக்கவாட்டில் தலா 9 தூண்களுடன் இரண்டு பக்கமும் 18 ம், குறுக்குவாட்டில் தலா நான்கு தூண்களுடன் இரண்டு பக்கமும் 8 மாக மொத்தம் 26 தூண்களுடன் இது அமைந்துள்ளது. இதன் கொள்ளளவு 5 லட்சம் லிட்டர். இதை நிரப்புவதற்கு 3 மணி நேரம் ஆகிறது. இதன் மேல் தளத்தில் 10 காற்றுப் போக்கிகள் உள்ளன. இவை தொட்டியில் தண்ணீர் நிறைய நிறைய சூடாக உள்ளிருக்கும் காற்று வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. 105 ஆண்டுகளுக்கு முன்பு அந்த தண்ணீர் தொட்டியில் என்னென்ன பயன்படுத்தப்பட்டனவோ அவை அப்படியேதான் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டது. மேல் தளத்திற்குச் செல்ல கோட்டைகளில் உள்ளது போன்ற சுழல் படிகள் உண்டு. ஈரோட்டுக்கு 1937 இல்தான் மின்சாரமே வருகிறது. 1919 இல் திறக்கப்பட்ட இந்த தண்ணீர் தொட்டிக்கு தண்ணீரை எப்படி ஏற்றி இருப்பார்கள்? அட! ஆமாம், எப்படி ஏற்றினார்கள்? வியப்பாக இருக்கிறதல்லவா? மின்சக்திக்கு முன்பிருந்த நீராவி சக்தி மூலம் தண்ணீரை தொட்டிக்குள் ஏற்றியிருக்கிறார்கள். இன்று வரையில் இந்த தண்ணீர் தொட்டியில் புதிதாக மராமத்துப் பணிகள் என்று எதுவும் நடைபெறவில்லை என்பது முக்கியமான செய்தி. மற்றபடி முறை வைத்துக்கொண்டு 6 மாதத்திற்கொரு முறை தண்ணீர் தொட்டியினுள் தூய்மைப்படுத்துகின்றனர். எப்போது தூய்மைப்படுத்தப்பட்டது? மறுபடியும் எப்போது தூய்மைப்படுத்த வேண்டும் என்று ஒரு பலகையில் எழுதி வைத்து செய்யும் நடைமுறையைப் பின்பற்றுகின்றனர்.
இப்போதைக்கு இந்த தண்ணீர் தொட்டியிலிருந்து இரவில் அதாவது, அதிகாலை 2 மணியிலிருந்து காலை 9 மணி வரை சில ஊர்களுக்கும், மற்றும் சில ஊர்களுக்கு அதிகாலை 2 மணியிலிருந்து காலை 8 வரையிலும் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒருநாள் விட்டு மறுநாள் என்று மாறி மாறி இரண்டு பகுதிகளுக்கும் குடிநீர் செல்கிறது. முதல் நாளில் திருநற்காலனி, கிருஷ்ணம்பாளையம், சாய்பாபா வீதி, பம்பிங் ஸ்டேசன் ரோடு, வாட்டர் ஆபீஸ் ரோடு, சாமியப்ப வீதி ஆகிய பகுதிகளுக்கும், அடுத்த நாள் பழனிமலை வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, கோட்டை ஆகிய பகுதிகளுக்கும் செல்கிறது. நகரம் விரிவடைந்த பிறகு பெரியார் கட்டிய தண்ணீர் தொட்டி நீர் இரவிலும், பகலில் செல்வதற்கென்று தனியே முதலில் 11 இலட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு தண்ணீர் தொட்டியும், தேவை கருதி மறுபடியும் 20 லட்சம் கொள்ளளவு உள்ள தண்ணீர் தொட்டியும் சமீபத்தில் கட்டப்பட்டுள்ளன. இந்த இரண்டும் பெரியார் தேர்ந்தெடுத்த இடத்திலேயே கட்டப்பட்டுள்ளது என்பது தனிச்சிறப்பு! இன்றைய நடைமுறையில் இந்த இரண்டு தொட்டிகளில் தண்ணீர் நிரம்பிய உடன், பெரியார் கட்டியுள்ள கோட்டைத் தொட்டியில் தண்ணீர் நிறையத் தொடங்கும். இந்த நேரத்தில் அதற்கான வால்வுகளை இயக்குவதற்காகவும், அதிகாலையில் தண்ணீரைத் திறந்துவிடுவதற்காகவும்தான் பணியாளர்கள் இருக்கின்றனர். ”கவனிச்சிருக்கீங்களா பெரியாரின் வீடும், இந்த தண்ணீர் தொட்டியும் ஒரே மாதிரியான வண்ணங்களில் கட்டப்பட்டிருக்கின்றன!” என்று இன்னுமொரு சுவையான தகவலைச் சொல்கிறார் அங்கிருக்கும் பணியாளர் தீனதயாளன்.
1992 இல் வ.உ.சி பூங்காவில் மிருகக்காட்சி சாலை இருந்துள்ளது. அப்போது பெரியார் கட்டிய தண்ணீர் தொட்டியை மைசூர் அரண்மணை போல வண்ண விளக்குகளால் அலங்கரித்திருந்தார்களாம். பார்ப்பதற்கே பரவசமாக இருக்கும். அதைக் காண்பதற்கே மக்கள் வருவார்கள் என்கிறார் நம்பிராஜன். அந்தக்கோட்டையின் முன்புறம் ஒரு கல்வெட்டு உள்ளது. அதில், ”ஈரோடு நகராட்சி குடிநீர்த்திட்டம் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் நகர் மன்றத் தலைவராக இருந்த போது 26.05.1919இல் திரு. பி.ராஜகோபாலாச்சாரியார், சி.அய்.இ. ஆட்சிக்குழு உறுப்பினர்: புனித ஜார்ஜ் கோட்டை, மெட்ராஸ் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது” என்று தமிழிலும், THE ERODE WATER WORKS OPENDE BY The Hon Dewan Bahadur P.RAJAGOPALACHARIAR. C.I.E. Member in Council, Fort St. George, Madras 26th May 1919. E.V.RAMASAWAMY NAIKER, Chairman” என்று ஆங்கிலத்திலும் மார்பிள் கல்லில் குடைந்து எழுதப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் 1917 ஆம் ஆண்டு முதல் 1919 ஆம் ஆண்டு வரை ஈரோடு நகர் மன்றத் தலைவராக பதவி வகித்தார். அன்றைய சூழலில் குடிநீருக்காக ஒடுக்கப்பட்ட மக்கள் மண்பானைக் குடங்களிலும், மற்றவர்கள் பித்தளை அல்லது செம்புக்குடங்களில் பல கிலோ மீட்டர் நடந்து சென்று நீரைப் பிடித்து வரவேண்டும். அப்படிப்பட்ட சூழலில் மக்களை அலையவிடாமல் அவரவர் குடியிருப்புப் பகுதிகளிலேயே தண்ணீர் வரும் வகையில் இந்தியாவிலேயே முதன் முதலாக வீட்டிற்கு ஒரு குழாய் என்ற திட்டத்தை தந்தை பெரியார் செயல்படுத்தினார். இதற்காக கோட்டை வடிவில் மேல்நிலைத் தொட்டி கட்டி, காவிரி ஆற்றிலிருந்து நீராவி சக்தி மூலம் நீரேற்றம் செய்து ஒவ்வொரு வீடுகளுக்கும் இரும்புக் குழாய்கள் மூலம் தடையில்லா குடிநீர் விநியோகிப்பட்டது. இதைப்பற்றி கேள்விப்பட்ட சேலம் நகர்மன்றத் தலைவராக இருந்த பார்ப்பனரான ராஜாஜி சேலத்திலும் இத்திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டார். பதவி வகித்த மிகக்குறுகிய காலத்திலேயே பெரியார் வியத்தகு பணிகளை செய்திருக்கிறார். அந்தப் பணிகளிலேயே, இது உச்சமான வியப்பை கொடுப்பதாகும். ஜாதிவெறி தலைவிரித்தாடிய அன்றைய நிலையை புத்தியில் கொண்டு வந்து பார்த்தால், மலைப்பைத் தருகிறது. இப்போது அந்த குடிநீரைப் பயன்படுத்தும் மக்களுக்கு பெரியாரைத் தெரிவதற்கு பெரும்பாலும் வாய்ப்பிருக்காது. அதுசரி, அவர்தாம் நன்றி பாராத தொண்டுக்கு சொந்தக்காரராயிற்றே! அவரைப்பொறுத்தவரை சம ஈவு, சம நுகர்ச்சி ஆகியவை மக்களுக்கு வரவேண்டும். அது எந்த மக்களாக இருந்தாலும் சரி. அதற்காகவே தன் வாழ்நாளையெல்லாம் ஒப்படைத்தவர் அவர். அந்தப்பணியில் அவர் வெற்றி பெற்றிருக்கிறாரா என்று கேட்டால், ஆம் என்று இந்த தண்ணீர் தொட்டி பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறது. நமக்குதான் கேட்கும் காதுகள் வேண்டும். இதற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. அந்த தண்ணீர் தொட்டிக்கு முன்பு ஒரு சிறிய மசூதி இருக்கிறது. தொழுகை நடத்துவதற்கென்று பெரிய சிமெண்ட் தரைத் தளமும், தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பு கை, கால் தூயமை செய்யும் பெரிய தண்ணீர் தொட்டியும் உள்ளது. அதுவும் ஒரு செய்தியை சொல்லாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறது.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இதை உள்ளே சென்று காண, இப்போது பொறுப்பிலிருக்கும் Swarna singh JE அவர்களிடம் முறையான அனுமதியைப் பெறவேண்டும். தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் அவர்கள் அந்த அனுமதியைப் பெற்றுத்தந்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், உடுமலை வடிவேல், அரும்பாக்கம் சா.தாமோதரன், ஒளிப்படக்கலைஞர் நிலவன் ஆகியோர் உடனிருந்தனர். ”நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு” என்ற திருக்குறளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அடிக்கடி பயன்படுத்துவார். அப்படி பெரியாரை படிக்கப் படிக்க அவர் இன்பம் தந்துகொண்டே இருக்கிறார்.
அதுமட்டுமல்ல – அவர் செய்த பணிகளையும் பார்க்க பார்க்க அதுவும் இன்பம் தந்துகொண்டே இருக்கிறது. மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட நிலையில் திரும்பும் போது, ”இதிலிருந்து ஒரு கல்லைக்கூட இன்னிக்கும் அசைக்க முடியாதுங்க” என்று அங்கிருக்கும் பணியாளர் நம்பிராஜன் சொன்னது திரும்பத்திரும்ப நமது காதுகளில் மோதிக்கொண்டே இருக்கிறது. வாழ்க பெரியார்! வெல்க ஜாதி ஒழிப்புப் பணி!
– உடுமலை வடிவேல்