மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனத்துடன் இஸ்ரோ ஒப்பந்தம்

Viduthalai
2 Min Read

பெங்களுரு, நவ.23- ‘ககன் யான்’ பணிக்காக ஆஸ்திரேலி யாவுடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
‘ககன்யான்’ திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவில் ‘ககன்யான்’ என்ற முதல் மனித விண்வெளி பயணத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இதற்காக இந்திய விமானப் படையில் விமானியாக பணி யாற்றும் குரூப் கேப்டன் பிரசாந்த பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷூ சுக்லா ஆகிய 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், ரஷ்யாவில் உள்ள ரோஸ்கோஸ் மோஸ் (ரஷ்ய விண்வெளி நிறுவனம்) பயிற்சியும் பெற்று வந்துள்ளனர்.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் புவி சுற்றுப் பாதையில் 3 நாட்களுக்கு 400 கிலோ மீட்டர் சுற்றுவட்டப் பாதைக்கு அனுப்பி, பாதுகாப்பாக மீண்டும் அவர்களை பூமிக்கு அழைத்து வருவதுதான் தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக, ராக்கெட்டின் மேல் பகுதியில் 3.7 மீட்டர் விட்டம் மற்றும் 7 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ள சிறிய அறையில் (குழு தொகுதி) 3 விண்வெளி வீரர்களும் அமர்ந்து விண்வெளிக்கு செல்லும் வகை யில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் விண்வெளியில் இருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவைப் பார்க்க முடியும். ஒவ்வொரு 90 நிமிடங் களுக்கு ஒருமுறை பூமியையும், 24 மணி நேரத்திற்கு ஒருமுறை இந்தியாவையும் பார்க்க முடியும்.

4-ஆவது நாடு என்ற பெருமை
பயணத்தை முடித்துக் கொண்டு குஜராத் கடற்கரையில் அரபிக்கடலில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால் அமெ ரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய 4-ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
ஆஸ்திரேலிய கடற்பகுதிக்கு அருகில் பணியாளர்களை தேடுதல் மற்றும் மீட்பதற்கும், வீரர்கள் அமர்ந்து செல்லும் குழு தொகுதியை மீட்டெடுப்பதற்கும் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற ஆஸ்தி ரேலிய அதிகாரிகளின் உதவியும் தேவைப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுடன் ஒப்பந்தம்: இந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் (ஏ.எஸ்.ஏ.) இடையிலான விண்வெளி நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான அமலாக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், இருதரப்பு விண்வெளி ஒத்து ழைப்பை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாகும். பணியின் போது ஏற்படும் அவசரகால சூழ்நிலைகள் உள்பட பல்வேறு சூழ்நிலைகளுக்கு தற்செயல் திட்டங்கள் நடை முறையில் இருப்பதை இந்த ஒத்துழைப்பு உறுதிசெய்கிறது.
பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மனித விண்வெளி விமான மய்யத்தின் (எச்.எஸ். எப்.சி.) இயக்குநர் டி.கே.சிங் மற்றும் ஆஸ்திரேலியா கான்பெராவில் ஏ.எஸ்.ஏ.தரப்பில் விண்வெளி திறன் கிளை யின் பொது மேலாளர் ஜாரோட் பவல் ஆகியோர் கையெழுத்திட்டுள் ளனர் என்று இஸ்ரோ விஞ் ஞானிகள் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *