சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் பகுத்தறிந்து பேசுவோம்-1 நிகழ்வின் முதல் கூட்டம் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தில் 17.11.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது
தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் ஏற்பாட்டில் பகுத்தறிந்து பேசுவோம்-1 நிகழ்வின் முதல் கூட்டம் 17-11-2024 அன்று காலை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு மன்றத்தின் மதியுரைஞர்கள் புதுமைத்தேனி மா.அன்பழகன், வீ.கலைச்செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மன்றத்தின் உறுப்பினர்கள், மற்றும் ஆதரவாளர்கள் பலர் குடும்பத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பெரியாரின் மனித நேய சிந்தனைகளையும்…
இந்நிகழ்வில் மன்றத்தின் உறுப்பினர் தோழர் லீலா ராணி மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை நெறிப்படுத்தி தொகுத்து வழங்கினார். அவரது நாவில் தமிழ் விளை யாடியது. ஒரு சிறந்த தொகுப்பாளினி அவருக்குள் இருப்பது நன்றாகவே வெளிப்பட்டது. நிகழ்வில் தலைவர் பூபாலன் வந்திருந்த அனைவரையும் வரவேற்று தனது தலைமை உரையையும் ஆற்றினார். இந்நிகழ்வின் நோக்கம் அடுத்த தலைமுறையினருக்கு பெரியாரின் மனித நேய சிந்தனைகளையும் பகுத்தறியும் தன்மையையும் கொண்டு செல்லவும் இளைய தலைமுறையினரின் பேச்சுத் திறனை வளர்க்கவும் ஆகும் என்று குறிப்பிட்டார். இம்மாதம் நடைபெறும் முதல் நிகழ்வு ஒரு சோதனை அடிப்படையில் நடத்துகிறோம். இதன் வரவேற்பைப் பொறுத்து தொடர்ந்து மாதாந்திர கூட்டமாக நடத்தலாமா என்று மன்றம் முடிவு செய்யும் என்றார்.
திருக்குறளை ஒட்டி கதை
அடுத்து, திருக்குறளை ஒட்டி கதை சொல்லும் அங் கத்தில் முதலாவதாக பாலர் பள்ளி மாணவி ஹரிணிசிறீ,
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
என்ற திருக்குறளுக்கு, காட்டில் வாழும் மிருகங்களை வைத்து சுவைபட தன் அழகிய சிரிப்புடன் மழலைத் தமிழில் சற்றும் பயமில்லாமல் ஒரு கதையைக் கூறினார். கதையைத் தன் மகள் கூறி முடிக்கும் வரை பார்வையாளர்களிலிருந்த அவரது தாயின் நடிப்பும் துடிப்பும் அனைவரின் பார்வையையும் ஈர்த்தது.
இரண்டாவதாக பாலர் பள்ளி மாணவர் கிருத்திக்,
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்
என்ற திருக்குறளுக்கு, தனது துடுக்கான பேச்சினால் கதை சொல்லி அனைவரையும் கவர்ந்தார். பேச்சில் மழலை இருந்தாலும் சொல்ல வந்த கதையை மிகத் தெளிவாக கூறினார். கதையில் சுட்டிப் பையனான தனது மகன் “வளர வளர சரியாயிடுவான்” என்று தந்தை சொல்லும் வசனத்தை கிருத்திக் கூறியதைக் கேட்டு அரங்கமே ரசித்தது.
பாலர் பள்ளி மாணவர்களுக்கான போட்டி என்றாலும் நாங்களும் பங்கு பெறுகிறோம் என்று இரு உயர்நிலை பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கேட்டு கொண்டதால் மூன்றாவதாக உயர்நிலை இரண்டு மாணவர் சேகர் தனுஷ்
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
என்ற திருக்குறளுக்கு, நம்மால் இதை செய்ய முடியுமா என்று எண்ணி நம்மை நாமே சந்தேகப்படாமல், நம்மால் செய்ய முடியும் என்று நம்பிக்கையுடன் செய்தால் அதுவே தமக்கு வலிமை யாக அமையும் என்ற கருத்தை ஒரு கதை மூலம் மிகுந்த உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் கூறினார்.
நான்காவதாக மற்றுமொரு உயர்நிலை இரண்டு மாணவர் தருண்ராஜ்,
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
என்ற திருக்குறளுக்கு, காந்தியாரின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து ஒரு கதையை நமக்காக அழகாக எடுத்துரைத்தார்.
அய்ந்தாவதாக மாணவி திவ்யா
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
பிறப்பினால் அனைவரும் சமம் என்ற குறளின் விளக்கத்தைத் தெளிவாக கூறினார். துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் அந்த பிரச்சினையை எதிர்நோக்க வேண்டும் என்று ஆணித்தரமாக பெரியாரின் சிந்தனைகளை நம் கண் முன் நிறுத்தினார்.
பெரியாரின் பொன்மொழிகள்
நிகழ்வின் அடுத்த அங்கமாக பெரியாரின் பொன் மொழிகளைக் கூறி விளக்குதலில், முதலாவதாக உயர்நிலை ஒன்று மாணவி யாழ் பாரதி பெரியாரின் நான்கு பொன்மொழிகளை எடுத்துக்கொண்டு, தன் பெயருக்கேற்ப இனிமையான தமிழில் பேசினார். “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு, சுயமரியாதை, ஒரு காலத்தில் உள்ள முறைகளை எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை, ஒருவன் மற்றவன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறானோ அப்படி அவன் மற்றவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும்” போன்ற பெரியாரின் பொன்மொழிகளை நயமாக எடுத்துரைத்தார்.
அடுத்து தொடக்கப்பள்ளி அய்ந்தாம் நிலை மாணவி தியா, “கல்வி அறிவும், சுயமரியாதை உணர்வும், பகுத்தறிவு தன்மையும் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்” என்ற பெரியாரின் பொன்மொழிகளில் ஒன்றை தன் பூட்டனின் (பாட்டனின் தந்தை) கதை கொண்டு அழகாக விளக்கினார். படிப்பறிவில்லாத பூட்டன் பட்ட அவமானத்தைக் கண்ட பாட்டன் படிப்பு தான் நம்மை தலை நிமிர்த்தும் என்று உணர்ந்து படித்து தலைமை ஆசிரியர் ஆனதை அழகாகக் கூறினார் தியா.
எக்காலத்திற்கும் தேவைப்படுகிற பெரியாரின் பொன்மொழிகளை இன்றைய தலைமுறையினர் எடுத்துச் சொல்லி கேட்கும் போது, ஏனோ நம்மை அறியாமல் கண்களில் நீர் வழிகிறது.
வாசிப்பும் வளர்ச்சியும்
நிகழ்வின் இறுதியாக மன்றத்தின் மதியுரைஞர் புதுமைத்தேனி மா.அன்பழகன் “வாசிப்பும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். சிங்கப்பூரில் பல அமைப்புகள் பேச்சுத் திறனை வளர்ப்பதற்கான வாய்ப்புகள் அமைத்தாலும் நாம் எடுக்கின்ற இந்த “பகுத்தறிந்து பேசுவோம்” என்ற நிகழ்வின் முன்னெடுப்பு சிறப்பானது. ஏனெனில் பகுத்தறிவு என்ற வார்த்தை மக்களிடையே ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அதை மாற்றுவது நமது கடமை. நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் நம்மை அறியாமல் பகுத்து அறிந்து செயல் செய்கிறோம். சிந்திப்பது ஒவ்வொரு மனிதனின் இயல்பு. தங்கள் சிந்தனைக்கு சரியென்பதை செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்.
வாசிப்பு தான் மனிதனை உயர்த்தும் என்று கூறி பெரியார், கலைஞர், அண்ணா, அம்பேத்கர், ஆபிரகாம் லிங்கன், சாக்ரடீஸ் போன்ற பல தலைவர்களின் வாழ்வி லிருந்து அவர்கள் வாசிப்பு மீதிருந்த ஆர்வத்தைப் பற்றிய சுவையான பல செய்திகளை அள்ளித் தெளித் துச் சென்றார்.
சான்றிதழ்கள் வழங்கல்
பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மன்றத்தின் மதியுரைஞர்கள் வீ.கலைச்செல்வம், புதுமைத்தேனி மா.அன்பழகன், சான்றிதழ்களையும் அன்பளிப்புகளையும் வழங்கி மாணவர்களைப் பாராட்டினார்.
நிகழ்வின் முதல் கூட்டத்தில் திட்டமிட்டதைவிட அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டு திருக்குறளை பற்றியும், பெரியார் பொன்மொழிகளையும் பேசியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு காரணமாக இருந்த மன்ற உறுப்பினர்கள் கவிதாமாறன், லீலாராணி, நரசிம்மன், கார்த்திக் ராமசாமி ஆகியோருக்கு நன்றி கூறப்பட்டது.
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற நல்லதொரு முன்னேற்பாடுகளை செய்த செயலாளர் தமிழ்செல்வி, ஒருங்கிணைத்த மாறன், பழனி, வள்ளியப்பன், மாதவி, மனோ, நிகழ்ச்சியை சிறப்பாக நெறிப்படுத்திய லீலாராணி மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மன்ற உறுப்பினர்கள் மலையரசி, மதியரசன், குடியரசி, அதியமான், கலைச்செல்வி, ராமன் ஆகி யோருக்கும் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெற்றோர்களுக்கும் நன்றி கூறப்பட்டது.
எப்போதும் நமக்கு நல்ல ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கி வரும் மதியுரைஞர்கள் தமிழறிஞர் சுப.திண்ணப்பன் அய்யா, புதுமைத்தேனி மா.அன்பழகன், வீ.கலைச்செல்வம் அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
செய்தி: வள்ளியப்பன், சிங்கப்பூர்