புதுடில்லி, நவ.20- அமலாக்கத்துறை பதிவு செய்த பணப்பரிவர்த்தனை வழக்குகளில் எத்தனை முடிந்துள்ளன, எத்தனை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டன? என்று உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளது. அமலாக்கத்துறை வழக்கில் பிணை கோரிய மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நேற்று (18.11.2024) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டு 9 மாதங்கள் அவர் சிறையில் இருக்கிறார். இது வரை விசாரணை நீதிமன்றத்தில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். வழக்கின் விசாரணையை விரைவில் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் அமலாக்கத்துறையை கண்டித்தனர். மனுதாரருக்கு பிணை வழங்கி உத்தர விட்ட உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை புகார்களில் எத்தனை வழக்குகளில் விசாரணை முடிவடைந் துள்ளன, எத்தனை வழக்குகள் தண்டனைக்கு வழி வகுத்துள்ளன என்பதை கண்டறிய வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.