லக்னோ, நவ.18 சனிக்கிழமை (16.11.2024) அன்று ஜான்சி மருத்துவமனையில் தீவிபத்து நடந்து கொண்டு இருந்தபோது 10 குழந்தைகள் தீயில் கருகி இறந்த செய்தி முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அப்போது அவர் காஷியாபாத் தொகுதியில் தனது கட்சியில் முக்கிய பிரமுகருக்கான பிரமாண்ட ரோடு ஷோ நடத்திக்கொண்டு இருந்தார். இது தொடர்பாக ஏ.என்.அய். செய்தி நிறுவனம் நேரலையில் ஒருபகுதியாக ஆதித்யநாத் ரோடு ஷோவையும் மற்றொரு பகுதியில் சுமார் 40 க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்த சிகிச்சை அறை தீயில் எரிந்துகொண்டு இருந்த காட்சியையும் இணைத்து செய்தி போய்க் கொண்டு இருந்தது,
11க்கு மேற்பட்ட பச்சிளங்குழந்தைகள் தீயில் கருகிய செய்தி தெரிந்தும் தேர்தல் பரப்புரையிலேயே குறியாக இருந்தார். அது மட்டுமல்ல சனியன்று காசியாபாத், ஞாயிறு அன்று போல்பூர்(அலகாபாத்)தொகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற அவர் செல்லவில்லை.
ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனைக்கு வருகை புரிகிறார் என்றதும் மருத்துவமனை நிர்வாகம் விஅய்பிக்களுக்கான வரவேற்பு கொடுத்து மருத்துவமனையின் பகுதிகளில் புதிய பூந்தொட்டிகள் மற்றும் மலர் மாலை தோரணங்களை இரவோடு இரவாக செய்து முடித்தது.
இப்படிச் செய்துகொண்டு இருக்கும் போதே மருத்துவமனைக்கு வெளியே குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் குழந்தைகளின் உடலை வாங்க கண்ணீர் விட்டு அழுதுகொண்டு இருந்தனர். அப்படி இருந்தும் ஒருபுறம் மலர் மாலைத்தோரணங்கள் கட்டுவதிலேயே மருத்துவமனை நிர்வாகம் கண்ணும் கருத்துமாக இருந்தது