அதிகாரத்தை பயன்படுத்தி ஊழல்: செபி தலைவா்மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

2 Min Read

மும்பை, நவ.17 சொந்த நிறுவனத்தின் ஆதாயத்துக்காக பங்குச்சந்தை ஒழுங் காற்று வாரியத்தின் (செபி) தலைவா் பதவியை பயன்படுத்தி மாதபி புரி புச் ஊழல் செய்துள்ளார் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி 15.11.2024 அன்று தெரிவித்தார். மேலும், நாட்டின் நலனை பாதுகாக்க வேண்டியவா்களின் உதவியோடு இந்திய பொருளாதார கட்டமைப்பை பெரு நிறுவனங்கள் சீரழித்து வருகின்றன என்றும் அவா் குற்றம்சாட்டினார்.

பல்வேறு விவகாரங்கள் குறித்து ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் பவன் கேரா விவாதம் மேற்கொண்டு யூடியூபில் அந்தக் காணொலிகளை பதிவிட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக செபி தலைவா் மாதபி புச் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து இருவரும் விவாதித்தனா். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: பங்குச் சந்தை வா்த்தகத்தை கண்காணிக்கும் சக்திவாய்ந்த செபி நிறுவனத்துக்கு தலைவராக இருக்கும் மாதபி புச் தன்னுடைய சொந்த நிறுவனம் ஆதாயம் பெறும் வகையில் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார். பெரும் கார்பரேட் நிறுவனங்களுடன் நிதி மற்றும் பல்வேறு ஒப்பந்தங்களில் மாதபி புச் ஈடுபட்டிருந்ததால் அந்த நிறுவனங்களை கண்காணிப்பதற்குப் பதில் அவா்களின் கூட்டாளியாக செயல்பட்டுள்ளார்.

கோடிக்கணக்கான இந்தியா்கள் பங்குச் சந்தையில் மிகுந்த நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் முதலீடு செய்கின்றனா். ஆனால் நாட்டின் நலனில் கவலைகொள்ளாமல் பொதுமக்களை ஏமாற்றி சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி விதிமுறைகளை சீா்குலைத்து கார்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டி தருவதையே முதன்மை நோக்கமாக கொண்டு அவா் செயல்பட்டுள்ளார்.

இந்தியாவின் பெரும் கார்பரேட் நிறுவனங்களை பாதுகாக்கும் கேடயமாக செபி போன்ற அமைப்புகள் செயல்படுவதை மக்களுக்கு தெரியப்படுத்தவே இந்த காணொலி வெளியிடப்படுகிறது. இது ஏகபோகம் குறித்து தெளிவுபடுத்துவது மட்டுமின்றி, ஜனநாயக பாதுகாப்பு, நியாயமான தொழில் போட்டி மற்றும் தங்களின் குரலை நசுக்கி வரும் அரசுக்கு எதிரான இந்தியா்களின் போராட்டம் என்றார் அவா்.

மாதபி மீதான குற்றச்சாட்டுகள்: முன்னதாக, அதானி குழும நிறுவனங்களின் முறைகேட்டுக்கு பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியில் மாதபி புரி புச் மற்றும் அவரின் கணவருக்கு பங்குகள் இருந்ததாக ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு மாதபி புச் மறுப்பு தெரிவித்தார்..

ஆஜராக மறுப்பு: இந்தச் சூழலில், செபி’ மற்றும் இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய காங்கிரஸ் மூத்த எம்.பி. கே.சி. வேணுகோபால் தலைமையிலான நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முடிவு செய்ததது. அதன்படி, செபி’ தலைவா் மாதபி புரி புச் மற்றும் ‘டிராய்’ தலைவா் அனில் குமார் லஹோட்டீ ஆகியோர் பொது கணக்குக் குழு முன் அக்டோபா் 24-ஆம் தேதி ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால் இந்தக் கூட்டத்தில் மாதபி புரி புச் ஆஜராகாமல் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *