புவனேஸ்வர், நவ.13- ஒடிசா அரசு மற்றும் பூரி கஜபதி மஹாராஜாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறி, ‘இஸ்கான்’ அமைப்பு அமெரிக்காவில் ரத யாத்திரை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
‘இஸ்கான்’ எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், பல நாடுகளில் கிளைகள் அமைத்து பக்தி பிரசாரங்கள் செய்து அமெரிக்காவிலும் செயல்பட்டு வருகிறது.
அங்கு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில், இஸ்கான் அமைப்பு சார்பில் கடந்த 9ஆம் தேதி ரத யாத்திரை நடத்தப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோவில் நந்திகோசா தேர் போன்ற வடிவத்தில் அலங்கரிக்கப்பட்ட தேர், நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.
பூரி ஜெகன்நாதரை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்ட தேரில் ஜெகன்நாதர், பாலபத்ரா, சுபத்ரா, சுதர்சன் சக்ரா ஆகிய கடவுள்களின் உருவச் சிலைகள் இடம்பெறாதது ஒடிசா மக்கள் மற்றும் பூரி ஜெகன்நாதர் பக்தர்களை ஏமாற்றம் அடைய செய்ததாம்.
இது குறித்து பூரி கோவர்தன் பீட செய்தி தொடர்பாளர் மாத்ரு பிரசாத் மிஷ்ரா கூறியதாவது:
பூரி ஜெகன்நாதர், சுபத்ரா உள்ளிட்டோரின் சிலைகள் ரத யாத்திரையில் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது.
வெளிநாடுகளில் ரத யாத்திரை நடத்த மாட்டோம் என ஒடிசா அரசுக்கும், பூரி கஜபதி மஹாராஜாவுக்கும் இஸ்கானின் ஹூஸ்டன் கிளை உறுதியளித்துள்ளது.
வாக்குறுதியை மீறி ரத யாத்திரை நடத்தப்பட்டுள்ளது. இது எங்கள் மதத்திற்கு எதிரான சதி. ஆகையால், நம் நாட்டில் இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும்.
-இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்து, இஸ்கான் அமைப்பின் ஹூஸ்டன் கிளையின் தலைவர் சாரங்கா தாகூர் தாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ஜெகன்நாதர் உள்ளிட்டோரின் சிலைகளுடன் ரத யாத்திரை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. உள்ளூர் சமூகத்தில் உள்ள எங்கள் நண்பர் குழுவின் ஆலோசனைப்படி திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ‘விழாவில் பங்கேற்பவர் பூரி ஜெகன்நாதரை தரிசனம் செய்ய வேண்டும் என்பதே இஸ்கானின் நோக்கம். ‘அடுத்த மாதம் இந்தியாவில் நடக்கவுள்ள பூரி அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, இது தொடர்பாக விரிவாக விவாதித்து பரஸ்பரம் நட்பு பேணப்படும்’ என்றார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து ஒடிசா சட்ட அமைச்சர் பிரித்விராஜ் ஹரிச்சந்திரன் கூறுகையில், “பூரி ஜெகன்நாதர் கோவில் நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு, மாநில அரசு கட்டுப்பட தயாராக உள்ளது,” என்றார்.