பற்றி எரியும் மணிப்பூர்: பாரா முகம் ஏன்?

Viduthalai
1 Min Read

இம்பால், நவ. 12- மணிப்பூரின் ஜிரிபாம் பகுதி காவல் நிலையத்தை குறிவைத்து குகி பழங்குடியின தீவிரவாதிகள் நேற்று (11.11.2024) திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடிகொடுக்கும் விதமாக பாதுகாப்புபடை வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தமோதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் மைத்தேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்து இதுவரை 237 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த சூழலில், பாதுகாப்பு படையினர், பொதுமக்களை குறிவைத்து குகி பழங்குடியினத்தை சேர்ந்த சில தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்திவருகின்றன.

கடந்த 8ஆம் தேதி ஜிரிபாம் பகுதியில் 6 வீடுகளை தீவிரவாதிகள் தீ வைத்து கொளுத்தினர். கடந்த 9ஆம் தேதி அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண்ணை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதன் தொடர்ச்சியாக, மணிப்பூரின் ஜிரிபாம் பகுதிகாவல் நிலையத்தை குறிவைத்து குகி பழங்குடியின தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். சுதாரித்துக் கொண்ட காவல்துறையினர், அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சிஆர்பிஎஃப் வீரர்களும் விரைந்து வந்தனர். பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய என்கவுன்ட்டரில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது: ஜிரிபாம் காவல் நிலையத்துக்கு அருகே அகதிகள் முகாம் உள்ளது. காவல் நிலையம்மற்றும் அகதிகள் முகாமை குறிவைத்துதீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.அவர்களது தாக்குதல் முறியடிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களில் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜிரிபாம் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *