லக்னோ, நவ.10- பள்ளிப் பேருந்துகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண்கள் பணியமர்த்தப்படலாம் என்றும், துணிக் கடைகளில், பெண்களுக்கு அளவெடுக்க பெண் தையல்காரர்களே வேண்டும் என்றும் உ.பி. மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.
இது குறித்து உ.பி. மகளிர் ஆணையம் கூறுகையில், இது ஆரம்பக் கட்டத்தில் உள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும். ஒப்புதல் கிடைத்ததும், முதலில், இது தொடர்பான கொள்கை முடிவு எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே, பள்ளிப் பேருந்துகளில், ஒரு ஆசிரியர் மாணவர்களுடன் செல்ல வேண்டும் என்பதும், துணிக் கடைகளில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பெண்களின் ஆடைகள் விற்பனை யாகும் கடைகளில் நிச்சயம் பெண் ஊழியர்கள் இருக்க வேண்டும் என்பதும், பயிற்சி நிலையங்களில், சிசிடிவி கேமராக்கள் மற்றும் பெண்களுக்கான ஓய்வறைகள் இருக்க வேண்டும் என்பதும் பரிந்துரையாக உள்ளது.
நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு அமைப்புகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தகவல் தொழில் நுட்ப வசதியுடன் பெண்கள் ஆபத்து காலங்களில் காவல்துறையை அழைக்கவும் சில செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கும் வந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.