சிறீநகர், நவ.7 அரசமைப்புச் சட்டத்தின் 370 சட்டப்பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியை ஒன்றிய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதன் மூலம் காஷ்மீரில் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் சொத்து வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீருக்கு அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வென்று ஆட்சியை கைப்பற்றியது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில சிறப்புத் தகுதி அளிக்கக் கோரி அந்த கட்சி கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு தகுதி வழங்க கோரும் தீர்மானம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் நேற்று (6.11.2024) கொண்டுவரப்பட்டது.
காஷ்மீர் துணை முதலமைச்சர் சுரேந்தர் சவுத்திரி, இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது எதிர்க்கட்சி தலைவரும், பாஜக உறுப்பினருமான சுனில் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சிறப்பு தகுதி தீர்மானத்தை தாக்கல் செய்தது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், இது குறித்து அவையில் விவாதிக்கக் கூடாது என்றும் கூறினார்.
இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரி வித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தவிர மற்ற அரசியல் கட்சிகள் இந்த தீர்மானத்தை ஆதரித்தன. ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்கள். தாரிக் கர்ரா, பீர்சதா முகமது சயீத் ஆகியோர் அமைதியாக இருந்தனர்.தீர்மானத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருதரப்பினரும் முழக்கம் எழுப்பியதால் அவையில் கடும் அமளி நிலவியது. இந்த அமளிக்கு இடையே காஷ்மீருக்கு மீண்டும் சிறப்புத் தகுதி கோரும்தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் சிறப்பு தகுதி வழங்குவது தொடர்பாக காஷ்மீரின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும். ஜம்மு காஷ்மீரின் அடையாளம், கலாச்சா ரம், மக்களின் உரிமைகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறப்புத் தகுதி மற்றும் அரசமைப்புச் சட்ட உத்தரவாதத்தின் முக்கியத்துவத்தை இந்த சட்டப்பேரவை மீண்டும் உறுதி செய்கி றது. சிறப்புத் தகுதியை மீண்டும் வழங்குவது தேசிய ஒற்றுமையையும், ஜம்மு காஷ்மீர் மக்களின் சட்டரீதியான விருப்பங்களையும் பாதுகாக்கும்.
இவ்வாறு அந்தத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.