உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் லாகூர்! அதிகபட்சத்தைவிட ஆறு மடங்கு மோசம்!

viduthalai
3 Min Read

லாகூர், நவ.5- வட இந்தியாவை போன்று பாகிஸ்தானிலும் குளிர் காலத்தில் காற்றுமாசுபாடு தீவிரம் அடைகிறது.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தரம் குறைந்த எரிபொருளை பயன்படுத்துவதால் ஏற்படும் புகை, குப்பைகள் மற்றும் பயிர்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டம், கட்டுமானப் பணிகள் காரணமாக பரவும் தூசுக்கள் என பல்வேறு காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது.

காற்றின் தரக்குறியீடு (ஏகியூஅய்) 0 முதல் 50 வரை இருந்தால் காற்றின் தரம் நன்றாக இருப்பதாக கருதப்படுகிறது. 51- 100 திருப்தி, 101- 200 பரவாயில்லை, 201-300 மோசம், 301-400 மிக மோசம், 401-450 தீவிரம், 450-க்கு மேல் மிக தீவிரம் எனவும் உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்துகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானின் லாகூரில் ஏகியூஅய் 3.11.2024 அன்று 1,900 ஆக உயர்ந்தது. இதுமுன்னெப்போதும் இல்லாத அளவாகும். 1.40 கோடி மக்கள் வசிக்கும் லாகூரில் காற்று தரக்குறியீடானது உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்ட வரம்பை விட 6 மடங்கு அதிகமாக இருந்தது. இதன்மூலம் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக லாகூர் உள்ளது.

இந்நிலையில் பஞ்சாப் அமைச்சர் மரியம் அவுரங்கசீப், ‘‘மக்கள்வீட்டிலேய இருக்க வேண்டும், ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
மேலும் காற்று மாசுபாட்டை குறைக்க ரிக் ஷாக்களை இயக்க அரசு தடை விதித்தது. சில பகுதிகளில் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

அண்டை நாடான இந்தியாவில் இருந்து வீசும் மாசுபட்ட காற்றால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துக்கான செயலாளர் ராஜா ஜஹாங்கீர் அன்வர் கூறுகையில்,

“இந்தியாவில் இருந்து வரும் கிழக்குப்புற காற்றால் நாங்கள் ஒரு விதத்தில் லாகூரில் அவதிப்படுகிறோம். நாங்கள் யாரையும் குற்றம் சொல்லவில்லை, இது இயற்கையான நிகழ்வு. என்றாலும் இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். இது தொடர்பாக கடிதம் எழுத உள்ளோம்’’ என்றார்

ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பொருளாதாரம் தள்ளாடுகிறது!
பங்கு சந்தை கடும் வீழ்ச்சி
முதலீட்டாளர்களுக்கு
ரூ.ஆறு லட்சம் கோடி இழப்பு

மும்பை, நவ. 5- கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஏமாற்றமளிக்கும் 2ஆம் காலாண்டு நிதி நிலை முடிவுகள், நவ. 7இல் நடைபெறவுள்ள அமெரிக்க பெடரல் ரிசர்வ் பாலிசி கூட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் நிதானமாகவும், லாப நோக்குடனும் செயல்பட்ட தால் இந்திய பங்கு சந்தையில் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 309 புள்ளிகள் அதாவது 1.27 சதவீதம் சரிந்து 24,000-க்கும் கீழ் சென்று 23,995 புள்ளிகளில் நிலைபெற்றது. அதேபோன்று, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1.18 சதவீதம் அதாவது 941 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 78,782 புள்ளிகளில் நிலைகொண்டது. அக்டோபர் 3ஆம் தேதிக்குப் பிறகு சென்செக்ஸ் ஒரே நாளில் இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்தது இதுவே முதல்முறை. நேற்றைய வர்த்தகத்தில் பங்குகளின் விலை கணிசமாக சரிவடைந்ததையடுத்து முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம்கோடிக்கு இழப்பு ஏற்பட்டது.
குறிப்பாக, சென்செக்ஸ் 420 புள்ளிகள் சரிவடைந்ததற்கு, ரிலையன்ஸ், இன்போசிஸ், அய்சிஅய்சிஅய் வங்கி, எச்டிஎப்சி வங்கி சன்பார்மா, டிசிஎஸ், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ் போன்ற முன்னணி பங்குகளின் விலையில் ஏற்பட்ட சரிவே முக்கிய காரணமாக கூறப்படுகிறது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *