பார்ப்பனர்கள் ஆர்ப்பாட்டம் ஜாதி ஆதிக்கத்துக்கானது திராவிடர் கழக ஆர்ப்பாட்டம் மக்கள் சமத்துவத்துக்கானது!

Viduthalai
7 Min Read

செய்தியாளர்களிடம் கழகத் துணைத் தலைவர்

திராவிட இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் பார்ப்பனர்களும் அவர்களின் அம்புகளான விபீடணர்களும் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கு அருகில் கடந்த 3.11.2024 அன்று காலையில் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அன்று மாலை அதே இடத்தில் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் – பேட்டி வருமாறு:
இன்று காலையிலே இதே இடத்திலே ஓர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. அது பார்ப்பனர்களால் தூண்டப்பட்டு பார்ப்பனர்களுடைய ஆயுதமாக, ஏவலாளியாக உள்ள ஒருவருடைய தலைமையிலே அந்த ஆர்ப்பாட்டம் கூட்டப்பட்டிருக் கிறது. அது கூட்டப்பட்ட கூட்டம். இங்கு வந்துள்ள கூட்டம் தாங்களாகவே வந்த தன்மான இயக்கக் கூட்டம்.

அவர்கள் நடத்திய அந்த ஆர்ப்பாட்டம், அதன் நோக்கம் என்னவென்றால், இந்த 2024ஆம் ஆண்டிலும், நாங்கள் பிராமணர்கள், எங்களை பிராமணர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனர் என்று சொல்லக்கூடாது. அவர்கள் ஆதிக்கத்தை எதிர்க்கக்கூடாது. ஜாதி இருக்க வேண்டும். ஜாதியைக் காப்பாற்ற வேண்டும் என்பது அவர்களுடைய ஆதிக்கக் குரலாக இருந்தது.
இன்னும் மேலாக, தாழ்த்தப்பட்டவர்களை, தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கினால், இழிவுபடுத்தினால் அவர்கள்மீது பிசிஆர் சட்டம் பாய்வது போல, பிராமணர்களை எதிர்த்துப் பேசினால், அவர்களுடைய ஜாதி ஆணவத்தை எதிர்த்துப் பேசினால், பிராமணர் என்று சொல்லாமல் பார்ப்பனர் என்று சொன்னால் அவர்கள்மீது புதிய சட்டம் ஒன்று கொண்டுவந்து தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
என்ன வேடிக்கை என்றால், பிராமணர் என்று சொல்லுகிறபோது ஹிந்து மத, வர்ணாஸ்ரமத்தின் அடிப்படையிலே பிராமண, சத்திரிய, வைஸ்ய, சூத்திரர் என்று 4 வகைப்படும்.

ஆகவே பிராமணர் என்றால், பார்ப்பனர் அல்லாத நாம் அனைவரும் சூத்திரர் என்று பொருள்.
நாங்கள் சொல்லவில்லை. ஹிந்து மத்தினுடைய முக்கிய ஸ்மிருதியாகிய மனுதர்மத்திலே 8ஆவது அத்தியாயத்தில் 415ஆவது சுலோகத்தில் சொல்கிறது.
சூத்திரர் என்றால் கீழ்ஜாதி மக்கள், விபச்சாரி மக்கள், காலங்காலமாக அடிமைத் தொழில் செய்ய வேண்டியவர்கள் என்று ஏழு காரணங்களை சொல்லி இவர்கள் சூத்திரர்கள் என்று சொல்கிறார்கள்.
இன்றைக்கு மீண்டும் அவர்கள் தங்களை பிராமணர்கள் என்று நிலை நிறுத்தப் போராடுகிறார்கள் என்றால், நாம் நம்மை சூத்திரர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும்.
இதை எதிர்ப்பதற்காக, இந்த இழிவைத் துடைப்பதற்காகத்தான் சுயமரியாதை இயக்கம், இந்த நாட்டிலே தோற்றுவிக்கப்பட்டது. 100 ஆண்டுகள் ஆகிவிட்டது.
அதுவும் இந்த நவம்பர் 3 ஆம் தேதி ஒரு தனிச்சிறப்பு.
இந்தத் தேதியில்தான், தந்தை பெரியார் 1957ஆம் ஆண்டு நவம் 3ஆம் தேதி தஞ்சாவூரிலே ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்தினார்.
அந்த மாநாட்டிலே தந்தை பெரியாருக்கு எடைக்கு எடை வெள்ளி நாணயம் கொடுக்கப் பட்டது.
அந்த மாநாட்டிலே தந்தை பெரியார் ஒரு கேள்வியை எழுப்பினார்.
இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதாக சொல்கிறாரகள். நான் கேட்கிறேன், சுதந்திர நாட்டிலே ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? என்று கேட்டார்.
அந்தக் கேள்விக்குப் பதில் இன்று வரை இல்லை.

இந்திய அரசமைப்புச்சட்டத்தில் 25,26 ஆவது பிரிவு மதப்பாதுகாப்பு என்று சொல்லி ஜாதியைக் காப்பாற்றுகிறார்கள்.
தந்தைபெரியார் அந்த மாநாட்டில் ஒன்றிய அரசுக்கு ஒரு வேண்டுகோள், அதில் எச்சரிக்கையைக் கொடுத்தார்.
நவம்பர் 26ஆம் தேதிக்குள் அரசியல் சட்டத் திலே ஜாதியைப் பாதுகாக்கின்ற பகுதி நீக்கப்பட வேண்டும்.
அப்படி இல்லையென்றால், ஜாதியைப்பாதுகாக் கின்ற அந்தப்பகுதியை பகிரங்கமாகக் கொளுத் துவோம் என்று தந்தை பெரியார் அறிவித்த நாள் இந்த நவம்பர் 3.ஆம் தேதி.
பொருத்தமாக இன்றைக்கு இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்துகின்றோம்.
ஆனால், அந்த சட்டத்தை திருத்தவில்லை, என்ன செய்தார்கள் என்றால், அரசியல் சட்டத்தைக் கொளுத்தினால் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை என்று ஒரு புது சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.
ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் 10,000 தோழர்கள் கருஞ்சட்டைத் தோழர்கள், திராவிடர் கழகத் தோழர்கள் தந்தைபெரியார் ஆணைய ஏற்று ஜாதியைப் பாதுகாக்கின்ற இந்திய அரசமைப்புச்சட்டத்தைக் கொளுத்தினார்கள்.
பலர் சிறையிலேயே மாண்டார்கள். அந்த நாளிலேதான் இன்றைக்கு நாம் கூடியிருக்கிறோம்.
இன்றைக்கு மீண்டும் அந்த பழைய ஜாதி ஆணவத்தை, நாங்கள் பிராமணர்கள்தான், நாங்கள் அதிகாரம் பண்ணக்கூடிய இடத்தில் இருக்கிறோம் என்றெல்லாம் காலையில் பேசியிருக்கிறார்கள். முழக்கமெல்லாம் போட்டிருக்கிறார்கள்.
ஜாதி இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

அப்படி என்றால், மக்கள் மத்தியிலே இந்த 2024லிலே சமத்துவ வாதிகள் யார்? மக்கள் மத்தி யிலே பிளவை உண்டாக்குபவர்கள் யார் என்பதை அம்பலப்படுத்த வேண்டும். அதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம்.
சிலர் நினைக்கிறார்கள், பார்ப்பனர்கள் முன்புபோல் இல்லை, மாற்றம் வந்துவிட்டது என்று நினைக்கின்ற நேரத்தில்,
இன்று காலையில் நடத்திய அவர்களுடைய ஆர்ப்பாட்டம், பேசப்பட்ட பேச்சு
இல்லையில்லை, 2024லிலும் நாங்கள் பிராமணர்கள்தான்
பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள்தான், மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள்தான்-அடிமைகள்தான் என்று நிலைநிறுத்துவதற்காக இன்றைக்கு ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள்.

அதன் எதிர்வினையாக நடப்பதுதான் இந்த ஆர்ப்பாட்டம் நாங்கள் தந்தைபெரியாராலே எழுச்சி பெற்றிருக்கின்றோம். தன்மானம் பெற்றிருக்கின்றோம்.
பெரியார் நாட்டில் ஜாதிக்கு இடமில்லை. சமத்துவத்திற்குத்தான் இங்கு இடமுண்டு என்கின்ற அடிப்படையில்தான் அந்தத் திசையில்தான் மக்கள் பயணிக்க வேண்டும். இதுதான் திராவிடர் கழகத்துடைய கருத்து என்ற அடிப்படையில்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.
காலையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தையும், அதில் முழங்கப்பட்ட முழக்கத்தையும், இப்போது நாம் நடத்துகின்ற ஆர்ப்பாட்டத்தையும், இங்கு பேசப்படுகின்ற கருத்துகளையும் முழக்கத்தையும் ஒப்பிட்டு எது சரி, எது தவறு என்று உணரவேண்டும் என்று நாட்டு மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

செய்தியாளர் கேள்வி: தந்தைபெரியார் 90வயசுக்கு மேலேயும் அவ்வளவு கஷ்டத்துக்கிடை யிலும் ஜாதி மதம் இவை தொடர்பாக நிறைய போராடியிருக்கார். திராவிடர் கழகம் இந்த இழிவு களை பார்த்த மட்டில் இந்த மாதிரி விஷயத்தில் வீரமணி அய்யா தலைமையேற்று பண்ணுவதற்கு மறுக்கிறாரா? பெரிய விஷயமா அவர் சார்பில் எதுவுமே நடக்கவில்லையே?

கழகத் துணைத் தலைவர் பதில்: திராவிடர் கழகம் நடத்துகிறது. திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் என்கிற முறையில் நடத்துகிறோம். கழகத்தினுடைய கொள்கைதான் முக்கியம். அந்த கொள்கை சரியா என்று பாருங்கள். யார் தலைமை வகிக்கிறார்கள் என்பதை பார்க்காதீர்கள். அவருடைய கட்டளைப்படி, அவருடைய யோசனைப்படி அவருடைய அறிக்கையின் படிதான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம்.
அவருடைய கருத்துக்கு மாறாக நடத்தவில்லை. அவர் வரவில்லை என்பதால் அந்த கருத்துக்கு மாறாக இருக்கிறார் என்று கருத வேண்டிய அவசியமில்லை. ஏதோ குறை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ரீதியில் இந்தக் கேள்வி இருக்கிறது.

செய்தியாளர் கேள்வி: பெரியாரின் கடவுள் மறுப்பைத் தவிர மற்றதை எதிர்ப்பதாக விஜய் கூறியுள்ளாரே?
இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
கழகத் துணைத் தலைவர் பதில்: பெரியாருடைய கடவுள் மறுப்பு தவிர, மற்றதை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொன்னார். ஆனால், பெரியார் கடவுள் மறுப்பை ஏன் சொன்னார்?

கடவுளை ஒழிப்பதற்காக, மறுப்பதற்காக இந்த இயக்கத்தை தந்தை பெரியார் உண்டாக்கவில்லை. ஜாதி ஒழிய வேண்டும், சமத்துவம் நிலவ வேண்டும் என்று சொன்னபொழுது, ஜாதியை கடவுள் கற்பித்தார்.
பிர்மாவின் நெற்றியிலிருந்து பிராமணன் தோன்றினான். காலிலிருந்து சூத்திரன் தோன்றினான் என்று சொன்னபோது, வர்ணாசிரமத்தை கடவுள் தான் கற்பித்தார் என்றால் அந்த கடவுளை எதிர்ப்பேன் என்றார். அந்த கடவுளை பாதுகாப்பது மதம் என்றால், அந்த மதத்தை எதிர்ப்பேன் என்றார். அந்த மதத்தை பாதுகாப்பது சாஸ்திரம் வேதம் என்றால் அதை எரிப்பேன் என்றார். ஏன் அரசியல் சட்டமே ஜாதியைப் பாதுகாக்கும் என்றால் அதை எரிப்பேன் என்று போராட்டம் நடத்தினார். ஆகவே, பெரியாருடைய கடவுள் மறுப்பு என்பது ஜாதி ஒழிப்பிலிருந்துதான் துவங்குகிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் பெரியாருடைய கடவுள் மறுப்பு தவிர, மற்றதை ஏற்றுக்கொள்வேன் என்பது அவர் பெரியாரைப்பற்றி இன்னும் முழுமையாக தெரிந்துகொள்ளவில்லை என்றுதான் கருத வேண்டியுள்ளது.

செய்தியாளர் கேள்வி: இன்று காலை அர்ஜூன் சம்பத் பிராமணர்களைப் பாதுகாக்கணும். பிராமணர்களுக்கு என்று தனியாக பிசிஆர் சட்டம் உருவாக்கணும். பார்ப்பான் என்று யாராவது பிராமணர்களை சொன்னால், அதற்கு தனியாக சட்டத்தை உண்டாக்கி, அவர்களை சிறையில் தள்ளணும்னு சொல்லி பிராமணர்களையெல்லாம் ஒன்று சேர்த்து இன்றைக்கு இதே இடத்திலே ஒரு கூட்டம் போட்டாரு, ஒரு ஆர்ப்பாட்டத்தை உண்டாக்கினாரு.
அதைப்பத்தி உங்களோட கருத்து என்ன?

கழகத் துணைத் தலைவர் பதில்: இப்போதுதான் எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் என்பதை விளக்க மாகச் சொன்னேன். இன்னொன்று, பார்ப்பான் என்பது புதிதாக நாங்கள் சொல்வது இல்லை.
பாரதியார் சொல்லியிருக்கார், “சூத்திர னுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொருநீதி என்று சாத்திரம் சொல்லிடு மாயின் அது சாத்திரமன்று சதியென்று கண்டீர்!” என்று பாரதியார் பாடியிருக்கார்.
‘பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின் நால்வகை சாதியை நாட்டினீர்’ என்று கபிலர் சொல்லியிருக்கார்.
‘‘சாஸ்திரம் பார்த்து பிறந்தாளாம்.
சாஸ்திரம் பார்த்து சமைந்தாளாம்.
சாஸ்திரம் பார்க்கின்ற பார்ப்பனப் பெண்கள் தாலி அறுப்பதேன்
‘‘ஞானப் பெண்ணே’’ என்று சித்தர்கள் பாடியிருக்கிறார்கள்.
பார்ப்பனச்சேரி என்று சிலப்பதிகாரத்தில் இருக்கிறது.
இந்த வார்த்தை பெரியார் உண்டாக்கியதல்ல.
இலக்கியத்திலும் உள்ளது.

செய்தியாளர் கேள்வி: தந்தை பெரியாரின் சமூக நீதி மண்ணில் இன்னும் வேங்கைவயல் போன்ற பிரச்சினைகளில் தீர்வு காணவில்லையே.
கழகத் துணைத் தலைவர் பதில்: தீர்வு காணாமல் இல்லை, அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இல்லை – கண்டிப்பாக செய்வார்கள். இந்த அரசு பெரியார் அரசு. சமூகநீதியை உறுதி செய்கிற அரசு. ஆகவே கண்டிப்பாக இந்த அரசு ஜாதி தீண்டாமைக்கு எதிர்ப்பாகத்தான் இருக்கும். உரிய வகையில் குற்றவாளியைக் கண்டு பிடிப்பார்கள்.
இவ்வாறு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *