சென்னை, நவ.3- தீவுத்திடலில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் சார்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப் பட இருப்பதால் பிராட்வே பேருந்து நிலையத்தை ராயபுரத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம்செய்யப்பட உள்ளது.
சென்னையின் பழைமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் உள்ளது. நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் “மல்டி மாடல்இன் டகிரேஷன்” என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக, சென்னை மாநகராட்சி நிர்வாகம் ரூ.823 கோடியை ஒதுக்கியுள்ளது.
அதன்படி, பிராட்வே பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி முழுவதும் இடிக்கப்பட உள்ளது. இங்கு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. அதே போன்று பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.
அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடைமேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணியை சென்னை மெட்ரோ ரயில்வே, சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து மேற்கொள்கிறது.
ராயபுரத்துக்கு மாற்றம்
இதற்கிடையே பொதுமக்கள் வசதிக் காக பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக தீவுத்திடலுக்கு மாற்ற கடந்த ஜூன் மாதம் சென்னை மாநகராட்சி திட்டமிட்டது. தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க ரூ.5கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால், தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தீவுத்திடலுக்கு பதிலாக பிராட்வே பேருந்து நிலையத்தை தற்காலிகமாக ராயபுரம் என்.ஆர்.டி. மேம்பாலம் அருகே உள்ள சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து, தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் கூறியதாவது:-
தீவுத்திடலில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே, ராயபுரம் அருகே சென்னை துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில் பிராட்வே பேருந்து நிலையம் இட மாற்றம் செய்யப்பட உள்ளது. தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலைய பணியை நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி,டிசம்பர் முதல் வாரத்தில் முழுமையாக பிராட்வே பேருந்து நிலையத்தை அங்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் 45 குடும்பங்களை இடமாற்றம் செய்யவும் இடம் கண்டறியப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் வரும் 5ஆம் தேதி தொடங்குகிறது. ஒப்பந்த;ம இறுதி செய்யப்பட்டு விரை வில் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.