சமஸ்கிருதம் போல நீட் திணிப்பு: உதயநிதி ஸ்டாலின்

Viduthalai
3 Min Read

கோழிக்கோடு, நவ. 3- 1920-களின் சமஸ்கிருதம் போல இன்று நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை மறுக்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று (2.11.2024) மலையாள மனோரமா பத்திரிகை நடத்திய இலக்கிய விழா கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: “மருத்துவத் தேர்வுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? நிச்சயம் இல்லை என்பதுதான் பதில்.இன்று எப்படி நீட் தேர்வு எளிய பின்புலம் கொண்ட, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை மறுக்கிறதோ அது போல நூறாண்டுகளுக்கு முன்பு 1920-களில் பல மாணவர்கள் மருத்துவம் பயில சம்ஸ்கிருதம் தடையாக இருந்தது.

பாசிசத்துக்கு எதிராக…
தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களை சேர்ந்த மக்கள் பாசிசத்துக்கு எதிராக நிற்கிறார்கள். அதற்கு காரணம் இங்கு முன்னெடுக்கப்பட்ட முற்போக்கு ரீதியான அரசியல். 1920-களில் அன்றைய சென்னை பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியருக்கு மாத ஊதியம் ரூ.200. அதுவே தமிழ் பேராசிரியருக்கு ஊதியம் ரூ.70. சமஸ்கிருத மொழியினால் எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆதாயம் அடைந்தார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
திராவிட இயக்கத்தின் சுயமரியாதை இயக்கம் தமிழை தனது அடையாளத்தின் மய்யமாக வைத்தது. ஹிந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ் சமூகத்தின் எதிர்ப்பு குரலாக இருந்தது. சமஸ்கிருதம் இல்லாத தமிழ் சொற்கள் உருவாகின. 1950-களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் சமஸ்கிருத மயமாக இருந்தது. அது அறிவியல் விஞ்ஞான பூர்வமற்ற கருத்துகளை பேசியது. அதனை எளிய மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
திராவிட இயக்கம்தான்
அந்த நிலையை மாற்றியதும் திராவிட இயக்கம் தான். ஆழமான அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்க சினிமா வலுவான ஊடகமாக பயன்பட்டது. அரசியல் பின்புலம் கொண்ட கதைகள் மக்களிடம் பேசப்பட்டது. வசனம் எழுதுவது கலைத்துவ பணியானது. அந்த கருத்துகள் நகரம், கிராமம் என அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேர்ந்தது.

1949இல் வெளிவந்த அறிஞர் அண்ணாவின் ‘வேலைக்காரி’ மற்றும் கலைஞரின் ‘பராசக்தி’ போன்ற படைப்புகள் திராவிட சித்தாந்தத்தை பேசின. அதன் தாக்கம் அரசியல் ரீதியான மாற்றங்களுக்கு வித்திட்டது. அன்றே பாலின பாகுபாட்டை கேள்வி எழுப்பினார் பெரியார்.
இன்று தமிழ் சினிமா பல கோடி வணிகமாக மாறி உள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களுக்கும் இதே நிலை தான். இதற்கு முக்கிய காரணம் மொழியை விட்டுக்கொடுக்காமல் இருந்தது தான். தென்னிந்தியாவில் நிலவும் அதே நிலை தான் வட இந்தியாவிலும் இருக்கிறதா என்று நாம் பார்த்தால் இல்லை என்று தான் சொல்வோம். அங்கு பல மொழிகள் ஹிந்திக்கு வழிவிட்டன. இப்போது ஹிந்தி படங்கள் மட்டுமே அங்குள்ளன.

இன்றும் ஹிந்தி மொழி திணிப்பு
1930 மற்றும் 1960 என இல்லை இன்றும் ஹிந்தி மொழியை திணிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. கடந்த மாதம் தமிழ்நாட்டின் தூர்தர்ஷன் ஹிந்தி மாதத்தை கொண்டாடியது. அதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அதனை எதிர்த்து திமுக குரல் கொடுத்தது. தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்” என தெரிவித்தார்.

அந்த ஒற்றை செங்கல்
முன்னதாக, இந்த நிகழ்வில் பங்கேற்க சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது ‘மதுரை எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தாமதமாகும் விவகாரத்தில் ஒன்றிய அரசை விமர்சிக்கும் வகையில் ஒற்றை செங்கல்லை கையில் எடுத்து தேர்தல் பிரச்சாரம் செய்திருந்தார். அந்த கல் எங்குள்ளது என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது.
“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு ஒன்றிய அரசு எப்போது நிதி ஒதுக்குகிறதோ அப்போது அதை அரசிடம் கொடுக்க தயாராக இருக்கிறேன். அது என்னிடம் பத்திரமாக உள்ளது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *