சென்னை, நவ.1- இன்று அதிகாலை முதலே இந்தியன் ரயில்வே அறிவித்திருந்ததைப் போல ரயில் டிக்கெட் முன்பதிவு காலத்தில் செய்யப்பட்ட மாற்றம் அமலுக்கு வந்ததால் பயணிகள் சிரமத்திற்குள்ளானார்கள்.
இந்தியன் ரயில்வே, ரயிலில் பயணிப்பதற்கான முன்பதிவு காலம் 120 நாட்களாக இருந்த நிலையில் திடீரென 60 நாட்களாக தற்போது இந்தியன் ரயில்வே குறைத்துள்ளது. இந்த நடைமுறை இன்று நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் குறைவான செலவில் தொலைதூர பயணங்களுக்கு மக்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில்களில் செலவு குறைவு என்பதோடு பாதுகாப்பாகவும் வேகமாகவும் பயணம் செய்யலாம். அதிக பேர் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வதால் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்போதும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதுவும் பண்டிகைக் காலங்களில் இந்தப் பிரச்னை இன்னும் அதிகமாக இருக்கும்.
பல நேரங்களில் மக்கள் பயணச் சீட்டுகளை சில மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து வரு கின்றனர். திடீரென்று எங்காவது செல்ல நினைத்தால் தட்கல் முறையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இதையும் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்க இந்தியன் ரயில்வே தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது 60 நாட்களுக்கு முன் முன்பதிவு என்பது இன்று நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.