பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் தலைமறைவான திருப்பூர் பா.ஜ.க. பிரமுகர் கைது!

viduthalai
2 Min Read

திருப்பூர், அக்.29- ஏலச்சீட்டு நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்து, தலை மறைவான பாஜகவைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரை திருப்பூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாநகரம், ஊத்துக்குளி சாலை, மண்ணரை, சத்யா காலனி, ரேவதி தியேட்டர் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மு.செந்தில்குமார் (45). பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர் திருப்பூர் – ஊத்துக்குளி சாலை, கருமாரம்பாளையம், நேதாஜி நகரில் அலுவலகம் வைத்து சிறீபரமேஸ்வரா குரூப்ஸ் என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

மேற்படி சீட்டு நிறுவனம் மூலமாக தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் வாராந்திர சீட்டும், ஏலச் சீட்டும் நடத்தி வந்துள்ளார். இவர் நடத்தி வந்த சீட்டில் திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து சீட்டுத் தொகையை பல்வேறு வகையில் செலுத்தி வந்தனர். அந்த தொகையை செந்தில்குமார் வசூல் செய்து சீட்டு அட்டையில் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார்.
இவர் 100க்கும் மேற்பட்டவர் களிடம் தீபாவளி சிறுசேமிப்பு திட்ட சீட்டிலும், ஏலச்சீட்டிலும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து கொண்டு பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றி தலை மறைவாகிவிட்டார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்கள், மோசடி செய்தவரைக் கண்டுபிடித்து தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த வாரம் கருமாரம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி உத்தரவின் பேரில், மாநகர மத்திய குற்றப் பிரிவில், மோசடி செய்து தலைமறை வான செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மத்திய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் தாமோதரன் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது.

தனிப்படையினர் புலன் விசாரணை செய்து தலைமறைவாக இருந்த செந்தில்குமாரை கடந்த 26.10.2024 அன்று கைது செய்தனர். குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 இல் செந்தில் குமாரை நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *