ஜார்க்கண்டில் திருப்பம் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் தாவல்

Viduthalai
1 Min Read

ராஞ்சி, அக்.23 ஜார்க்கண்டில் பாஜக மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் உட்பட ஏராளமான பாஜ தலைவர்கள் திடீரென ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்தனர். ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு வருகிற நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜெ.எம்.எம்.), காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜ கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 21.10.2024 அன்று பாஜகவை சேர்ந்த மூன்று மேனாள் சட்டமன்ற உறுப்பினர்களான லூயிஸ் மராண்டி, குணால் சாரங்கி, லக்ஷ்மன் துடு ஆகியோர் திடீரென முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க் கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இணைந்தனர். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் மூன்று முறை பா.ஜ. சட்டமன்ற உறுப்பினராக இருந்த கேதர் ஹஸ்ரா, ஏஜேஎஸ்யூ கட்சித் தலைவர் உமாகாந்த் ரஜக் ஆகியோரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இணைந்தனர்.

பாஜ மேனாள் சட்டமன்ற உறுப்பினர் லூயிஸ் மராண்டி, கடந்த 2014இல் நடந்த தேர்தலின் போது தும்கா தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரனை 5,262 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது எக்ஸ் பதிவில், ‘‘மேனாள் பாஜ துணைத் தலைவர் மற்றும் மூத்த தலைவர் மரியாதைக்குரிய லூயிஸ் மராண்டியை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா குடும்பத்துக்கு வரவேற்கிறேன்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *