தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினை பிரதமர் அலுவலக செயலாளரை வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது – மதுரை உயர் நீதிமன்றம் மறுப்பு

Viduthalai
1 Min Read

மதுரை. அக். 21- மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெறுகிறது. ஆகவே, இந்திய கடற்படை கப்பல், எல்லைக் கோட்டில் இருந்து இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க இடைக்கால உத்தரவிட வேண்டும்.

மேலும், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கொல்லப்படுவதையும், வலைகளைப் பறித்து கைது செய்வதையும் தடுக்கும் வகையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அறிவுறுத்த வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசின் வழக்குரைஞர் ஆஜராகி, “இந்த வழக்கில் பிரதமர் அலுவலக முதன்மைச் செயலரை தேவையின்றி சேர்த்துள்ளதாகவும், அவரை வழக்கி லிருந்து நீக்குமாறு கோரிக்கை” விடுத்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், “பிரதமர் அலுவலக செயலாளர் வழக்கில் சேர்க்கப்பட்டதில் என்ன தவறு? ஏன் அவரை வழக்கிலிருந்து நீக்க வேண்டும் என கேள்வி எழுப்பியதோடு, மீனவர்கள் தாக்கப்படுவது பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினால் சரியாகும் என மனுதாரர் நினைக்கிறார், அதில் தவறு ஒன்றும் இல்லை” என கூறினர்.
எனவே மனுதாரர் கோரிக்கை குறித்து பிரதமர் அலுவலகச் செயலாளர், ஒன்றிய உள்துறைச் செயலாளர், ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *