மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு!

Viduthalai
3 Min Read

உலக பட்டினிக் குறியீடு: 127 நாடுகளில் இந்தியா 105 ஆவது இடம்!

பட்டினியில் துயருறும் 73 கோடி மக்கள்!

 

லண்டன், அக்.13 உலக பட்டினிக் குறி யீட்டில் 127 நாடுகளில் இந்தியா 105 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் 73 கோடி மக்கள் பட்டினியால் வாடு கிறார்கள்.

இதுகுறித்த செய்தி விவரம் வருமாறு:
19ஆவது உலக பட்டினிக் குறியீட்டு (GHI) அறிக்கை 2024 இல் இந்தியா 127 நாடுகளில் 105ஆவது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. வளரும் நாடுகளுக்கிடையே வறுமை மற்றும் உணவு கிடைக்காத சூழல் குறித்து ஆய்வு செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா தனது அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், மியான்மர் மற்றும் வங்கதேசத்தைவிடப் பின்தங்கியுள்ளது.

உலகப் பட்டினி அட்டவணை!
‘கன்சர்ன் வேர்ல்ட்வைட்’ மற்றும் ‘வெல்ட்ஹங்கர்ஹில்ஃபே’ ஆகியவற்றால் கூட்டாக வெளியிடப்பட்ட உலகப் பட்டினி அட்டவணை உலகளவில் பசியைக் கண்காணிக்கிறது. அவசர நடவடிக்கை தேவைப்படும் பகுதிகளில் கவனம் செலுத்துகிறது. 2024 அறிக்கையில் இந்தியாவிற்கான 27.3 மதிப்பெண் கடு மையான பசி, நிலையைக் குறிக்கிறது.
இந்தியா இந்தப் பட்டியலில் 105 ஆம் இடத்தில் வருகிறது இது ‘கடுமையான’ வகையின் கீழ் வருகிறது. இந்தியா அதன் அண்டை நாடுகளை விட மிகவும் பின்தங்கியுள்ளது. இது மிகவும் ‘அச்சுறுத்தும்’ எண்ணிக்கையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு 100ஆவது இடத்தில் இருந்தது. மன்மோகன் சிங் ஆட்சியை விட்டு விலகும் போது இந்தியா பட்டினிப் பட்டியலில் 2014இல் 55ஆவது இடத்தில் இருந்தது. இது கடந்த 10 ஆண்டுகளில் 105ஆவது இடத்திற்கு வந்து விட்டது.
கடந்த மாதம் நடைபெற்ற நிட்டி ஆயோக் கூட்டத்தில் குஜராத்தில் குறைவான எடை மற்றும் வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிஜேபி ஆளும் குஜராத் மாநிலம் பின்தங்கியே உள்ளது!
“நாட்டில் பொருளாதார ரீதி யாக வளர்ந்த மாநிலங்களில் பசி யின்மையைக் கொண்டு வருவதிலும், குழந்தைகளிடையே ஊட்டச்சத்தை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து பிஜேபி ஆளும் குஜராத் மாநிலம் பின்தங்கியே உள்ளது. இந்திய மாநிலங்களில் பசி யின்மை குறியீட்டில் குஜராத், 25 ஆவது இடத்தில் உள்ளது.

குஜராத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 39 சதவிகிதத்தினர் வளர்ச்சி குன்றியும், 15 முதல் 49 வயதுடைய கர்ப்பிணிகளில் 62.5 சதவிகிதம் பேர் குருதிச் சோகை குறைபாட்டையும், 25.2 சதவிகிதம் பேர் 18.5-க்கும் குறை வான உடல் நிறை குறியீட்டையும் கொண்டுள்ளனர்.
2018 மற்றும் 2019 ஆண்டுகளை ஒப்பிடும்போது, குறைவான எடை மற்றும் வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் குருதிச் சோகை கொண்ட பெண்களின் பாதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரி விக்கப்பட்டது.
அய்க்கிய நாடுகள் மன்றம் 2015ஆம் ஆண்டில் 17 நிலையான வளர்ச்சி இலக்கு களை நிறுவியது. ஒரு நாட்டிற்குத் தேவைப்படும் அத்தியாவசிய தேவை களை நிவர்த்தி செய்வதற்காக நிலையான வளர்ச்சி இலக்குகள் கொண்டு வரப்பட்டன.
அகமதாபாத்தில் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியரான ஆத்மன் ஷா கூறுகையில், “2030-க் குள் பூஜ்ஜிய பசியை அடைவதற்கு ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் மய்யப்படுத்தப்பட்ட முயற்சிகளில், அவசர மற்றும் கணிசமான முதலீடு தேவைப்படுகிறது” என்று கூறுகிறார்.

ஒன்றிய அரசின் நிட்டி ஆயோக் அமைப்பே குற்றம் சாட்டுகிறது!
இந்தியாவில் பட்டினிக்குறியீடு அட்ட வணை அவ்வப்போது வெளிவந்தாலும் உடனே இந்திய ஒன்றிய அரசு சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வரும். ஆனால், ஒன்றிய அரசின் நிட்டி ஆயோக் அமைப்பே குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டினியால் ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் மோசமாக உள்ளது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது. போதாதா? என்ற முழக்கம்தான் நினைவிற்கு வருகிறது.
ஒரு நாடு வளர்ச்சித் திக்கில் செல்லு கிறதா – வீழ்ச்சிப் பள்ளத்தில் வீழ்கிறதா என்பதற்கு அடையாளம் பட்டினிக் குறியீடுதான். இந்த அவலப் பரிசைத் தட்டிப் பறிப்பதுதான் மோடியின் பிஜேபி ஆட்சி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *