‘முரசொலி செல்வம்’ (வயது 82) என்று அழைக் கப்படும் – மக்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர் மாரடைப்பால் இன்று (10.10.2024) பெங்களூரில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெருந் துயரத்திற்கு ஆளானோம்.
‘முரசொலி’யின் ஆசிரியராகவும், நிர்வாகியாகவும் இருந்தவர். ‘சிலந்தி’, என்ற புனைப் பெயரில் ‘முரசொலி’யில் எழுதி வந்த ஆற்றல்மிகு எழுத்தாளர்! 50 ஆண்டு காலம் ‘முரசொலி’க்குத் தூணாக இருந்தவர்!
கருத்துரிமைக்காக தமிழ்நாடு சட்டப் பேரவையில் கூண்டில் நிறுத்தப்பட்டவர் – அப்பொழுதும் கம்பீரமாக நின்ற துணிச்சல்காரர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது சகோதரியின் மகனும், மருமகனுமான செல்வம் அவர்கள் ‘முரசொலி’மாறன் அவர்களின் தம்பியும் ஆவார்.
நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் அத்தை மகனும், மைத்துனருமாவார்.
பெரிய அளவு விளம்பர வெளிச்சத்துக்கு வராமல் அடக்கமாக, ஆக்கப்பூர்வமாக பணிகளை கடமை உணர்வோடு ஆற்றக் கூடியவர்.
நம்மிடம் மிக்க அன்பும் மதிப்பும் கொண்டவர்.
அவரின் எதிர்பாராத மறைவால் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் ‘முரசொலி’ செல்வம் அவர்களின் வாழ்விணையர் திருமதி செல்வி அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், குறிப்பாக முதலமைச்சர் அவர்களுக்கும், நண்பர்களுக்கும், தி.மு.க. தோழர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வீர வணக்கம் செலுத்துகிறோம்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்