தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாடு அரசுக்கு உரிய நிதியை ஒன்றிய அரசு அளிக்கும் என்பதா?

Viduthalai
2 Min Read

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டனம்!

சென்னை, அக்.10 தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை வழங்குவோம் என்று கூறி தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக ஒன்றிய அரசு மீது குற்றம்சாட்டி, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக் குழு சென்னையில் நேற்று (9.10.2024) ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் கு.வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்துக்கு (எஸ்.எஸ்.ஏ.) வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 165 கோடியை வழங்குவோம் என்று கூறி தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிப்பதாக தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் அப்போது குற்றம்சாட்டினர்.

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டனம்!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: ஒன்றிய அரசு நிதி ஒதுக்காவிட்டாலும் மெட்ரோ ரயில் பணிகளுக்கு தமிழ்நாடு அரசுநிதி வழங்கியதுபோல ஆசிரியர்களுக்கும், அமைச்சுப் பணி யாளர்களுக்கும் இந்த அரசு நிதி வழங்கும். நாளை ஒருநாள் மட்டும் வேலை நாள். அப்புறம் 3 நாட்கள் விடுமுறை. அதனால் உங்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை இன்று மாலைக்குள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்றார் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் கே.வி.தங்கபாலு: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் ஒன்றிய அமைச்சர்களாக இருந்தும் தமிழர்களுக்கு எந்தப் பயனும்
இல்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஒன்றிய அரசு நிர்பந்தத்தால் தமிழ்நாட்டின் அடிப்படைக் கோட்பாடுகளை காற்றில் பறக்கவிட முடியாது. ஒருபோதும் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: சுமார் 35 ஆயிரம் ஆசிரியர்கள் ஊதியம் இல்லாமல் தவிப்பதைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு உடனே நிதியை விடுவிக்க வேண்டும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலை வர் திருமாவளவன்: கல்வி என்பது பொதுப்பட்டி யலில் இருக்கிறது. புதிய கல்வி முறையை நடைமுறைப்படுத்தாததால், ஒன்றிய அரசு நிதியை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
முன்னதாக, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகி கள் பேசினர்.

செப்டம்பர் மாத ஊதியத்தை வழங்கியது தமிழ்நாடு அரசு
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ‘எக்ஸ்‘ தளத்தில், ‘ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் சுமார் 32,500 அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என நேற்று (9.10.2024) தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்களுக்குரிய செப்டம்பர் மாத ஊதியம் நேற்று (9.10.2024) வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *