கடந்த 1.10.2024 அன்று நாகையில், தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்புக் குறித்து, இலங்கை அரசை எதிர்த்து, தாங்கள் நடத்திய போராட்டமும், பெருந்திரள் கூட்டமும் காலத்தின் கட்டாயமாகும். பல கட்சிகள் இப் பிரச்சினையில் வாளாவிருந்து விட்டன. சில கட்சிகள் அறிக்கைகளை வெளியிட்டன. ஆனால், திராவிடர் கழகம் ஒன்றுதான், போராட்ட உணர்வுடன் இலங்கையின் கொடுமையை, அநியாயத்தை எதிர்த்து மக்கள் சக்தியோடு போராட்டங்களை நடத்தி வருகிறது. சென்ற ஆண்டில் கூடப் புதுக் கோட்டையில் ஜெகதாப்பட்டினத்திலும் இந்தப் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத் தியுள்ளது. இவற்றிற்கெல்லாம் மூல காரணமாக உள்ள தங்களுக்கும், தங்கள் இயக்கத்தினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் அயராப் பணி தொடர வேண்டுகிறேன்.
கடந்த 17.9.2024 அன்று காலை, திடலில் நிகழ்ந்த தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் ஆற்றிய உரை அருமையாக இருந்தது. வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக அய்.நா.வின் மக்கள் நலப் பிரகடனத்துடன் தந்தை பெரியாரின் சிந்தனைகளை ஒப்பிட்டுப் பேசியது சிறப்பாக இருந்தது. அவர், தம் பேச்சினைப் பொருட்செறிவோடு நிதானமுடன் வெளிப்படு்த்திய முறை அருமையாக இருந்தது. அவ்வுரை அவர் எதனையும் ஆழமாகச் சிந்திப்பவர் என்பதை நன்கு புலப்படுத்தியது. கழகச் சார்பில் நிகழும் முக்கிய கூட்டங்களில் இனி அவருக்கு வாய்ப்புக் கொடுத்தாக வேண்டும் என்பது என் வேண்டுகோள். இப்படி அவருக்கு வாய்ப்பு அளிப்பது கழகத்திற்கும் நல்லது; அவருக்கும் நல்லது. அவரது அரிய பேச்சுக்காக அன்று அவரை நேரிலேயே பாராட்டினேன். அவரது பேச்சைக் குறித்துத் தங்களுக்குக் கடித வாயிலாகத் தெரிவிக்க எண்ணியிருந்தேன். பல்வேறு பணிகளால் அது இயலாமற் போனது. இப்போது இக்கடிதம் எழுதியதற்கு அதுவே முதற் காரணம்.
– பா. வீரமணி, சென்னை