உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
அகமதாபாத், அக்.5 குஜராத்தில் தனது உத்தரவை மீறி வீடுகள், மசூதிகளை உள்ளிட்டவற்றை இடித்திருந்தால், அந்த மாநில அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் நேற்று (4.10.2024) எச்சரிக்கை விடுத்தது.
உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் குற்ற நிகழ்வில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுவோருக்கு சொந்தமான கட்டடங்கள், குறிப்பாக முஸ்லிம் மதத்தினருக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீா்ப்பு வழங்கப்படும் வரை, நாடு முழுவதும் குற்ற நிகழ்வில் தொடா்புள்ளதாக குற்றஞ்சாட்டப்படுவோர் உள்ளிட்டோருக்குச் சொந்தமான கட்டடங்களை, தனது அனுமதியின்றி புல்டோசா் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயில் அருகே அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததாக தெரிவித்து வீடுகள், மசூதிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் இடித்து அகற்றினா்.
இது புல்டோசா் மூலம் கட்டடங்களை இடிக்கும் வழக்கில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிரானது என்பதால், அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள கோரி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமா்வு முன்பாக 4.10.2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை அவமதித்துள்ளது தெரியவந்தால், குஜராத் அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும். அத்துடன் அந்த கட்டுமானங்களை மீண்டும் கட்டித்தர உத்தரவிடப்படும்’ என்று தெரிவித்தனா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை அக்டோபா் 16-க்கு ஒத்திவைக்கப்பட்டது.