*தமிழ்நாட்டிற்குக் கொடுக்க வேண்டிய கல்வி நிதி *மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி

Viduthalai
7 Min Read

*தமிழின மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்
பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த இந்த மூன்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்
நாகையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

நாகை, அக்.3 பிரதமரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் வைத்த மூன்று கோரிக்கைகள் நிறை வேற்றப்பட வேண்டும் என்று நாகப்பட்டி னத்தில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கூறினார்.

1.10.2024 அன்று நாகப்பட்டினத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டிவருமாறு:

மனிதநேயத்திற்கு எதிரான,
மனித உரிமைகளுக்கு எதிரான போக்கு!

தமிழ்நாட்டு மீனவர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்படக் கூடிய கொடுமைகள், உலகத் தாருடைய பார்வையில், மனிதநேயத்திற்கு எதிரான, மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு போக்கு என்பதைக்கூட மறந்து, அவர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள்.

இன்னுங்கேட்டால், ஒரு புதிய அரசு, இலங் கையில் ஏற்பட்டு இருக்கிறது. அதன்மூலமாக விடியல் கிடைக்கும் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தோம். இதற்கு முன்பு நடந்ததைவிட, இன்னும் அதிகமான கொடுமைகள் நடைபெறுகின்றன. இதற்கு முன்பு நடந்ததைவிட, இப்பொழுது தமிழ்நாட்டு மீனவர்கள்மீதான தாக்குதல்கள் அதிகமாகி இருக்கின்றன.

மொட்டையடித்து அவமானப்படுத்தி, அபராதம் விதித்து சிறைச்சாலையில் அடைக்கிறார்கள்!

ஒரு பக்கம் இலங்கைக் கடற்படை, நம்முடைய மீனவர்களுடைய வாழ்வாதா ரங்களையெல்லாம் சிதைத்துக் கொண்டி ருக்கின்றது. மீனவர்களைக் கைது செய்து சிறைச்சாலையில் அடைப்பது மட்டு மல்ல, அவர்களை மொட்டையடித்து அவமானப் படுத்தி, அபராதம் விதித்து சிறைச்சாலையில் அடைப்பது – அவர்களுடைய வாழ்வாதாரமான படகுகளைப் பறித்துக் கொள்வது போன்ற கொடுமைகளைச் செய்து கொண்டிருக்கின்றது.

ஆனால், ஒன்றிய அரசு, மோடி தலைமையில் இருக்கக்கூடிய மைனாரிட்டி பா.ஜ.க. அரசு இதையெல்லாம் கண்டும் காணாமல் வாய்மூடி மவுனமாக இருக்கிறது.

ஒவ்வொரு முறையும், நம்முடைய முதலமைச்சர் அவர்கள், ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருக்கின்றார்கள். அண்மையில்கூட, 27 ஆம் தேதி, டில்லிக்கு நேரில் சென்று பிரதமரைச் சந்தித்தபொழுதுகூட, அவரிடம் வைத்த மூன்று கோரிக்கைகளில் மிக முக்கியமான கோரிக்கையாக, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு உரிமைகள் வேண்டும்; அவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதை இந்திய அரசு கண்டித்து, இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசுக்குச் சொல்லவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால், பதில் மவுனமாகத்தான் இருக்கிறது. நாளுக்கு நாள் கொடுமைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில், கொதிநிலை இங்கே ஏற்பட்டு இருக்கிறது. மீனவ சகோதரர்களின் வாழ்வாதாரம் மீன் பிடிப்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்?

அவர்களுடைய பாதுகாப்புக்கு நாங்கள் இருப்போம் என்று தொடக்கத்தில், ஒன்றிய அரசு பதவியேற்குமுன் சொன்னார்கள். ஆனால், இப்பொழுது அதைவிட அதிக மான கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன.

இலங்கை அரசை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றியவர்கள் நாம்!

‘‘கத்தி போய் வாளு வந்தது டும் டும் டும்’’ என்று சொல்லுவதுபோல, புதியதாக அமைந்த இலங்கை அரசு க்கு, இந்தியாதான், இன்னுங்கேட்டால், தமிழ்நாடுதான் எல்லா உதவிகளையும் செய்து, அந்த நாட்டின் பொரு ளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றியது.

நமக்கு மனிதாபிமானம் உண்டு. ஆனால், அவர்களுக்கு வெறும் இனவெறிதான் இருக்கிறது.
இங்கே எழுப்பப்பட்ட முழக்கங்களைக் கேட்டிருப்பீர்கள் – ‘‘குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி – தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இன்னொரு அளவுகோலா?’’ என்று சொல்லக்கூடிய அநீதி இருப்பதை எதிர்த்து, இன்றைக்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெறுகிறது.

இங்கே கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினரும் இருக்கிறார்கள். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட மீனவ சகோதரர் களும், தாய்மார்களும் ஏராளமாகத் திரண்டிருக் கிறார்கள்.

இலங்கைக் கப்பற்படை, இலங்கை அரசு,
இலங்கை நீதிமன்றங்கள் நடந்துகொள்ளும் போக்கு ஏற்கத்தக்கதல்ல!

மீனவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவேண்டும்; மீனவர்களுக்கு எதிராக நடக்கக்கூடிய இலங்கைக் கடற்படை, இலங்கை அரசு, இலங்கை நீதிமன்றங்கள் நடந்துகொள்ளும் போக்கு ஏற்கத்தக்கதல்ல – மனிதநேயத்திற்கு விரோதமாக இருப்பவையாகும்.

அதனைக் கண்டிப்பதற்காகத்தான் இவ்வளவு பெரிய கண்டனப் பேரணியும், போராட்டமுமாகும்.
நண்பர்களே, நாகையில், திராவிடர் கழகத்தால் பேரணி, போராட்டம் நடைபெற்றா லும், இப்போராட்டம், பேரணியில் வெறும் திராவிடர் கழகத்துக்காரர்கள் மட்டும் கலந்து கொள்ளவில்லை. மாறாக, தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்துணை உணர்வாளர்களும், மனிதநேயர்களும், கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, கூட்டணிக்கு அப்பாற்பட்டவர்களும் கலந்துகொண்டிருக்கின்றார்கள்.

தமிழ்நாடே திரண்டு எதிர்க்கும்!

ஆகவே, இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, தங்களுடைய போக்கை இலங்கை அரசு மாற்றிக் கொள்ளவேண்டும். இல்லையானால், தமிழ்நாடே திரண்டு இதனை எதிர்க்கும். ஏனென்றால், மீண்டும் மீண்டும் எங்களுடைய தமிழ்நாடு அரசு சொல்லிக் கொண்டிருக்கின்றது.

தேர்தல் நேரத்தில், “கச்சத்தீவு, கச்சத்தீவு’’ என்று வேகமாகப் பேசி, அதன்மூலமாக வாக்கு வங்கியை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள். ஆனால், தேர்தலுக்குப் பிறகு அவர்கள் எடுத்த நடவடிக்கை என்ன? இதுதான் மிக முக்கியமான கேள்வியாகும்.

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்த கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்புவார்கள்.
ஆகவேதான், இந்தப் போராட்டம் என்பது அறப்போராட்டமாக நடைபெறுகிறது. வன்முறைக்கு இடமில்லாத ஒரு போராட்டமாக, தமிழ்நாடு முழுவதும் இப்போராட்டத்தின் எதிரொலி இருக்கும்.

அதுமட்டுமல்ல, உலக நாடுகள் சபையில் இந்தக் கொடுமைகளை எடுத்துச் சொல்லவேண்டும். பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவேண்டும்.

காக்கை, குருவிகளை சுடுவதற்குக்கூட அனுமதி கிடையாது – நம்முடைய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்!
ஏனென்றால், நம்முடைய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். காக்கை, குருவிகளை சுடுவதற்குக்கூட அனுமதி கிடையாது. அப்படி மீறி சுட்டாலும், அதற்குத் தண்டனை உண்டு. ஆனால், எங்கள் சகோதரர்களான மீனவர்களை சுடும்பொழுது, அதைத் தட்டிக் கேட்பதற்குகூட நாதியில்லை என்று நினைக்கிறார்கள். இந்த வேதனையும், கொடுமையும்தான் எங்களையெல்லாம் இப்படி தெருத் தெருவாக அலைய வைத்திருக்கிறது.

ஆகவே, இந்தப் பேரணி என்பது இருக்கிறதே, இது ஏதோ ஓரிடத்தில் நடைபெறுகின்ற குறிப்பிட்ட நிகழ்வல்ல நண்பர்களே, இதுதான் மிகப்பெரிய ஒரு போராட்டம்.

ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று?

எதிர்காலத்தில், இதுபோன்ற கொடுமைகள் நடைபெறாமல் தடுத்து நிறுத்தப்படவேண்டும். நாடு தழுவிய அளவில் பட்டினிப் போராட்டம் நடத்தினார்கள் நம்முடைய மீனவர்கள். போராட்டங்களை நடத்தினார்கள் – ராமேசுவரத்தில், நாகப்பட்டினத்தில், அறந்தாங்கியில், கோட்டைப்பட்டினத்தில், சென்னையில் நடத்தினார்கள். இங்கே போராட்டங்களை நடத்தினால் மட்டும் போதாது – இதன் முக்கியத்துவம் டில்லியை அடையவேண்டும். அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நீர்மேல் எழுதிய எழுத்துகள்போல் ஆகியிருக்கின்றன.

அனைத்துத் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை!

இந்தப் போராட்டம் தொடக்கம்தானே தவிர, இந்தப் போராட்டம் இறுதியானதல்ல. இது ஒரு கட்சியினுடைய போராட்டம் அல்ல – அனைத்துத் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாகும்.
எனவே, இதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு அலட்சியப்படுத்தக் கூடாது. இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடவேண்டும். இலங்கை அரசினுடைய போக்கில் மாற்றத்தைக் காணவேண்டும்.
இல்லையானால், இந்தப் போராட்டம் ஒரு எரிமலையாய், மேலும் மேலும் மிகப்பெரிய வடிவெடுத்து அடக்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சரின் கடிதத்திற்கு
இதுவரை பதில் இல்லையே?

செய்தியாளர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்திற்கு, ஒன்றிய அரசோ, வெளியுறவுத் துறை அமைச்சரோ இதுவரையில் பதில் சொல்லவில்லையே?

தமிழர் தலைவர்: ஆமாம்! வெளியுறவுத் துறை அமைச்சர், அந்தக் கடிதங்களை வாங்கி வைத்திருக்கிறாரே தவிர, அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

நம்முடைய முதலமைச்சரின் மூன்று கோரிக்கைகள்!

நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, மூன்று கோரிக்கைகளை வைத்தார்.

அதில் ஒன்று, தமிழ்நாட்டிற்குக் கொடுக்கவேண்டிய கல்வி நிதி.

இரண்டாவது, மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணத்தைக் கொடுக்கவில்லை என்பதால், அதனை கேட்டு.
மூன்றாவதாக அவர் வைத்த மிக முக்கியமான கோரிக்கை, தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்பதுதான்.

ஆனால், தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவது மட்டுமல்லாமல், இப்பொழுது இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு, துப்பாக்கிச் சூடு நடத்தி நம்முடைய மீனவர்களின் உயிர்களைப் பறிக்கக் கூடிய அளவிற்கு வந்திருக்கின்றது என்றால், இது மிகப்பெரிய அளவிற்குக் கொடுமையானதாகும்.

‘‘அவன் கிடக்கிறான், நான் போய்த் தீர்க்கிறேன் என்று சொல்லி, இன்னும் கடுமையான ஒரு நோயை உண்டாக்குவதுபோல’’ நடந்துகொண்டிருக்கின்றது.

அவர்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றபொழுது நம்முடைய உதவியை நாடுகிறார்கள். இந்திய அரசின் உதவி

இல்லாவிட்டால், இன்றைக்கு இலங்கை அரசே இருந்திருக்காது.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அவற்றையெல்லாம் மறந்து இன்றைக்கு இப்படி நடந்துகொள்கிறார்கள் என்றால், அதற்கு என்ன காரணம்?

ஒன்றிய அரசு இதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான்.

பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவேண்டும்!

ஒன்றிய அரசு கண்டிப்போடு இலங்கை அரசிடம் நடந்துகொண்டு பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவேண்டும்; உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும்; மீனவர்கள் தாக்கப்படுவதை, கொல்லப்படுவதை, அவமானப்படுத்தும் கொடுமைகளுக்கு ஒரு தீர்வு காணவேண்டும்.
அதற்காகத்தான், இந்தப் பேரணி, போராட்டம் என்பது ஒரு தொடக்கமாகும்.

எரிமலை போன்று கொதித்துக் கொண்டிருக்கின்றது!

இந்த உணர்வு கடலளவு போல இருக்கிறது; எரிமலை போன்று கொதித்துக் கொண்டிருக்கின்றது. இதனை ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எச்சரிக்கையாக சொல்கிறோம்.

இது தமிழ்நாடு என்பதை மறந்துவிடக் கூடாது. நீங்கள் மீண்டும் மீண்டும் ஓட்டு வேட்டைக்காக தமிழ்நாட்டிற்கு வந்தால் மட்டும்போதாது; எங்கள் உரிமைகளை அவர்கள் பறிப்பதற்குப் பதில் சொல்லியாகவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியமாகும்.

நன்றி, வணக்கம்!

-இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *