5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை!
போபால், அக்.3 மத்தியப் பிரதேசத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவர் கூட சேராத நிலை உள்ளது. அரசின் ‘சிஎம் ரைஸ் பள்ளி’-களில் சேர்க்கைக்காக நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் இச்சூழல் உள்ளது. ‘ராஜ்ய சிக்ஷா கேந்திரா’ வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் 2024-2025 ஆம் கல்வியாண்டில் 5,500 பள்ளிகள், ஒன்றாம் வகுப்பில் ஒரு சேர்க்கையை கூட பதிவு செய்யவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் சுமார் 25 ஆயிரம் பள்ளிகளில் ஒன்றி ரண்டு மாணவர்கள் மட்டுமே சேர்க்கப் பட்டுள்ளனர். 11,345 பள்ளிகளில் தலா வெறும் 10 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுமார் 23 ஆயிரம் பள்ளிகளில் 3 முதல் 5 குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புகின்றனர். பல அரசுப் பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர், கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும், நிரந்தர ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பெரும்பாலான அரசுப் பள்ளிகள் கவுரவ ஆசிரியர்களைக் கொண்டு இயங்குவதாகவும் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மதிய உணவு, இலவச சீருடை,பாடப்புத்தகங்கள் ஆகி யவை வழங்கப்பட்டாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை யானது மிகக் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், ‘ராஜ்ய சிக்ஷா கேந்திரா’ இயக்குநர் ஹர்ஜிந்தர் சிங் கூறுகையில், “இது தொடர்பாக இன்னும் தரவுகளை ஆய்வு செய்யவில்லை. அதேநேரத்தில் ஒட்டுமொத்த அமைப்பை மேம்படுத்த ஒரு திட்டம் வகுக்கப்படும். சில பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கப்படவில்லை என்பதால், அவற்றில் கல்வியில் குறைபாடு இருக்கிறது என்பதல்ல. ஆனால், தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி அளிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை” என்றார்.
இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் அம்மாநில கல்வி அமைச்சர் பரதுமான் சிங் தோமார் ஆய்வு மேற்கொள்ளச் சென்றார். அப்போது மதிய உணவு வேளை என்பதால் தானும் பிள்ளைகளோடு அமர்ந்து உண்ண விருப்பப்பட்டு அமர்ந்தார்.
அங்கே பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட சோறு சரியாக வேகாமல் இருந்தது; அதே வேளை யில் பருப்பு குழம்பு என்ற பெயரில் தண்ணீரில் மஞ்சள் மற்றும் சில மசாலாக்களை மட்டுமே போட்டு கொதிக்க வைத்து பிள்ளைகளுக்குக் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் வந்ததால் வேறு வழி யின்றி அதே மசாலாத் தண்ணீர் அவருக்கும் வழங்கப்பட்டது. உப்பும், பருப்பும் இல்லாத அதைப் பார்த்த அமைச்சர் ஏன் இப்படி என்று கேட்டதற்கு, காய்கறிகள் மற்றும் பருப்புகள் பள்ளி தரப்பில் வாங்கி பில் கொடுத்த பிறகு பணம் தருகிறோம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
ஆனால், பள்ளி நிர்வாகத்திடம் பணம் இல்லாததால், தண்ணீரும், கைவசம் உள்ள மசாலாவையும் சேர்த்துள்ளோம் என்று ஆசிரியர்கள் கூறவும், வேறு வழியின்றி இந்த விவகாரத்தை முதலமைச்சரிடம் கொண்டு செல்கிறேன் என்று கூறிவிட்டு சாப்பிடாமலேயே எழுந்து சென்றுவிட்டார் கல்வி அமைச்சர் பரதுமான் சிங் தோமார்.