மும்பை, செப்.30 எதிர்க்கட்சிகளை பிளவு படுத்த திரைமறைவில் பாஜக கூட்டம் நடத்துவதாக உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே நேற்று (29.9.2024) கூறியதாவது:-
‘‘நாக்பூருக்கு அண்மையில் சென்ற ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, பாரதீய ஜனதா தலைவர்களுடன் பூட்டிய அறைக்குள் கூட்டம் நடத்தினார். அப்போது எதிர்க்கட்சிகளைப் பிளவு படுத்தி என்னையும், சரத்பவாரையும் அரசியல் ரீதியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார். திரைமறைவில் அவர்கள் பேசுவது ஏன்? இதை மக்கள் முன்பு சொல்ல வேண்டும்.
என்னையும், சரத்பவாரையும் அரசியல் ரீதியாக முடித்துவிட அமித்ஷா ஏன் விரும்புகிறார்? அப்போதுதான் பாரதீய ஜனதா மராட்டியத்தை கொள்ளையடிக்க முடியும். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்ற கட்சிகளை உடைப்பது மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை வேட்டையாடுவது உள்ளிட்ட பாரதீய ஜனதாவின் ஹிந்துத்துவாவுடன் எப்படி உடன்படுகிறார் என்பது ஆச்சரியமளிக்கிறது.வர இருக்கும் தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்று வதை விட, மராட்டியத்தைக் கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்து வதே முக்கியம்.’’
இவ்வாறு அவர் கூறினார்.