சென்னை, செப். 29- தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவியேற்கும் முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் நேற்று (28.9.2024) மாற்றம் செய்யப்பட்டது. அதன் படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று (29.9.2024) காலை 11.30 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பொன்னாடை அணிவித்து தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரை அளித்து கழகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் நினைவிடம், அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம் ஆகிய இடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
காலதாமதமாக செய்தி தெரிந்ததால் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விரைந்து வந்தார்.
தந்தை பெரியார் அருங்காட்சியகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் துணை முதலமைச்ச ராக இன்று பிற்பகல் பதவியேற்க இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதேபோன்று புதிய அமைச்சர்களாக பதவியேற்க இருக்கும் கோவி.செழியன், சேலம் ராஜேந்திரன் ஆகியோருக்கும் கழகத் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களும் தமிழர் தலைவருக்கும் பயனாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்வுகளில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், அண்ணா சரவணன், மஞ்சை வசந்தன், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் நா.பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்திருந்தபோது, அமைச்சர் பெருமக்கள் பி.கே.சேகர்பாபு, தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, சென்னை மாநகர மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எழும்பூர் ரவிச்சந்திரன், எழும்பூர் பகுதி திமுக செயலாளர் சுதாகர் உள்ளிட்ட பெருந்திரளாக திமுக நிர்வாகிகள் தொண் டர்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.