தோழர்களே, கருஞ்சட்டைத் தோழர்களே!
அக்டோபர் முதல் தேதி நாகைக் கடலின் ஓசைக்கும், கருஞ்சட்டைப் படையின் முழக்கத்திற்கும் தான் போட்டி!
நாகை ஆர்ப்பாட்டம் என்பது ஏதோ தமிழ்நாட்டு மீனவர்களுக்கான ஆர்ப்பாட்டம் –போராட்டம் என்று குறுக்க வேண்டாம்!
தமிழர்களின் உரிமைப் பிரச்சினை! நமது ரத்தத்தின் ரத்தமான நமது தமிழின மீனவர்கள் பிரச்சினை.
பட்டுப் புடவையை இரவல் கொடுத்து, பலகைக் கட்டையைப் பின்னால் தூக்கிச் சென்ற கதையாக அல்லவோ இருக்கிறது!
கச்சத்தீவு தமிழர்களுக்கானது! அதனை இலங்கைக்குத்தாரை வார்த்தபோது நாம் உறங்கிக் கொண்டிருக்கவில்லை; உரக்க குரல் கொடுத்தோம்; தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போர்ப் பரணிப் பாடினர். ஒரு கட்டத்தில் இந்திய அரசைக் கண்டித்து அவையிலிருந்து வெளி நடப்பும் செய்தனர்.
தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டது என்று சொல்லுவது அபாண்டமானது. 1974 ஜூலை 23ஆம் நாள் மக்களவையில் இதுபற்றி தி.மு.க. பிரச்சினை எழுப்பியது.
இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத் தீவை தாரை வார்த்துக் கொடுக்கும் இந்த மோசமான ஒப்பந்தத்தைப் போடுவதற்குமுன் மத்திய அரசு எங்களோடு ஆோலசனை நடத்தியிருக்க வேண்டும் அல்லது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு, இந்த அவையின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். இலங்கையோடு நல்லுறவு வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். ஆனால் இந்த ஒப்பந்தம் நம் நாட்டின் ஒரு பகுதியை எந்த வரை முறையுமின்றித் தாரை வார்த்துக் கொடுப்பதாக இருக்கிறது. இது எந்த அரசும் செய்யக் கூடிய காரியமில்ல எனவே வெளி நடப்பு செய்கிறோம் என்று தி.மு.க.வைச் சேர்ந்த இரா. செழியன், நாஞ்சில் கி.மனோகரன் ஆகியோர் வெளி நடப்புச் செய்தனர். பார்வட் பிளாக்கைச் சேர்ந்த பி.கே. என். தேவர், பெரியகுளம் முகம்மது ெஷரிப் (முஸ்லிம் லீக்), ஒடிசா பி.கே. தேவ் (சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி) ஆகியோரும் வெளிநடப்புச் செய்தனர்.
அய்.நா.மாநாட்டில் ராஜபக்சே பேசியது என்ன?
பிரேசில் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்ற அய்.நா. மாநாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சே என்ன பேசினார் தெரியுமா?
எங்கள் கடல் பரப்புக்குள் தமிழ்நாடு மீனவர்கள் மீின் பிடிக்க வந்தாலும், அனைத்துலக சட்டப்படி 20 ஆண்டுகள் சிறையில் தள்ளுவேன் என்று பேசினாரே!
கச்சத் தீவு பறி போனதற்கு தி.மு.க. உடந்தை என்று புழுதி வாரித் தூற்றுவது – அரசியல் – அப்பட்டமான பச்சை அரசியலே!
இன்றைக்கு இலங்கையிலே ஆட்சி மாறியி ருக்கலாம் –இவர்கள் ராஜபக்சேகளின் மறுபதிப்புகளே!
தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சேக்கு மேலும் மேலும் அழுத்தம் கொடுத்தவர்கள்தான் இவர்கள்.
தமிழ் மாநிலங்களை இணைக்கக் கூடாது என்று எகிறிக் குதித்தவர்கள்!
இதில் மார்க்சியம் என்ற முன்னொட்டு வேறு
இந்தப் புதிய ஆட்சி வந்த பிறகும் தமிழ்நாடு மீனவர்களின் மீதான தாக்குதல் – கைது என்ற படலம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
28.9.2024 மாலை மீன் வளத் துறையின் அனுமதியோடு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் இரு விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவுக் கடற்பரப்பில், தமிழின மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்தனர்.
வலைகளை அறுத்து எறிந்துள்ளனர். இவ்வகையில் புதிய அதிபர் பொறுப்பேற்ற அய்ந்தே நாட்களில் இந்த அத்துமீறல் அரங்கேறியுள்ளது.
நெஞ்சு பொறுக்குதில்லையே! இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வெங் கொடுமை நெருப்புக் கடலில், ஒவ்வொரு நொடியும் நம்மின மீனவர்கள் செத்து செத்துப் பிழைப்பது!
நாகையில் அக்டோபர் முதல் நாள் மாலை தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் இலங்கை அரசின் ஈவிரக்கமற்ற போக்கையும், ஒன்றிய பிஜேபி அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!
நாகை மாவட்டத் தோழர்கள் மட்டுமல்ல; அண்டை மாவட்டக் கழகத் தோழர்களும், உணர்வாளர்களும் அணி திரண்டு வாரீர்! வாரீர்!! என்று அழைக்கிறோம் – அழைக்கிறோம்.
நாகை ஆர்ப்பாட்டத்தில் கட்சி வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க முன் வந்துள்ளனர் என்பது மகிழ்ச்சி மிக்க நற்செய்தி!
நம் பங்கும் முக்கியமாக முத்திரை பதிக்கப்பட வேண்டாமா?
வாரீர் தோழர்களே, வாரீர்! வாரீர்!!
- கவிஞர் கலி. பூங்குன்றன்