தேனி, செப்.28 தேனி அருகே கோவிலுக்குள் சிறுமிகளை அழைத்துச் சென்று பூசாரி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் தாக்குதலுக்கு பயந்து கோவிலுக்குள் சென்று பூட்டிக் கொண்ட பூசாரியை மீட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தேனி மாவட்டம் வடகரை பகுதியில் பிரபலமான கோயில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் 65 வயதான திலகர் என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். அக்கோவிலில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் கோவிலைத் திறந்து திலகர் பூஜை செய்வது வழக்கம், பூஜையின் போது அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொள் வார்கள்.
மேலும் கோயில் முன்பாக மைதானம் போன்று இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர்கள் தினமும் மாலை நேரங்களில் விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம் போல் கோவிலில் பூஜை நடைபெற்ற நிலையில் சில குழந்தைகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதில் இரு சிறுமிகளை அழைத்த திலகர் அவர்களுக்கு இனிப்பு தருவதாக கூறி கோயிலுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்.
தொடர்ந்து அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர் சிறுமிகள் சத்தம் போட்டதோடு கோவிலில் இருந்து அலறிக் கொண்டே வெளியே ஓடி வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியுள்ளனர். இதனால் அச்சமடைந்த திலகர் எங்கே தன்னை அவர்கள் தாக்கி விடுவார்களோ என பயந்து போய் கோவிலுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவைத் திறந்து திலகரை கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் சிறுவர் சிறுமிகளுக்கு இனிப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திலகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவிலுக்குள் சிறுவர் சிறுமியருக்கு பூசாரி பாலியல் தொல்லை அளித்த சம்பவமும் அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.