திருச்சி, செப்.25- ஆரோக்கியமான குடும்பம் மகிழ்ச்சியான குழந்தைகள் என்ற தலைப்பில் திருச்சி காவேரி மருத்துவமனை 22.09.2024 அன்று நடத்திய “காவேரி மாரத்தான்” போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இளநிலை மருந்தியல் பட்டப்படிப்பு மாணவர்கள் ம.முரளி கார்த்திக், ஏ.முகமது சித்திக் மற்றும் பட்டயப்படிப்பு மாணவி சி. ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
உடற்பயிற்சி, குடும்ப ஆரோக்கியம் மற்றும் சமூகப் பிணைப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி 21 கி.மீ, 10 கி.மீ., 5 கி.மீ. என மூன்று விதமான மாரத்தான் ஓட்டப் போட்டிகளை தமிழ்நாடு மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், காவல்துறை ஆணையர் என்.காமினி மற்றும் மாவட்ட வன அலுவலர் கிருத்திகா சீனுவாசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். திருச்சி அரசு சட்டக் கல்லூரியிலிருந்து துவங்கி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிறைவு பெற்ற 10 கி.மீ. தூரத்தை பெரியார் மருந்தியல் கல்லூரியின் மாணவர்கள் மூன்று பேரும் நிறைவு செய்து பதக்கங்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளானவர்கள் இம்மாரத்தான் போட்டியில் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.