திருவனந்தபுரம், செப். 24- – கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவு பேரிடருக்கு ஒன்றிய அரசு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர் களை சந்தித்த அவர், ஒன்றிய அரசின் விதிமுறைகள்படி, மீட்பு பணிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 219 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்க வாய்ப் புள்ளதாக கூறினார்.
புதையுண்ட, இடிந்த ஒரு வீட்டுக்கு 1.30 லட்சம் ரூபாய் மட்டுமே ஒன்றிய அரசு வழங்குவதாகவும், ஒரு கிலோ மீட்டர் சாலைக்கு ஒரு லட்சம் ரூபாய், ஒரு பள்ளிக்கு 2 லட்சம் ரூபாய் என்பதுதான் ஒன்றிய அரசின் விதிமுறையாக உள்ளது என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.
ஒன்றிய அரசின் அந்த தொகை யில் ஒரு பள்ளிக்கு அடித்தளம் கூட போடமுடியாது என்றும் எனவேதான், வயநாடு பேரிடர் மீட்பு பணிக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாயும், புனரமைப்பு பணிகளுக்கு 2ஆயிரத்து 200 கோடி ரூபாய்சிறப்பு நிதியும் வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
ஆனால் ஒன்றிய அரசு இதுவரை எந்த நிதியும் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டிய கேரள முதலமைச்சர், விமானப் படையினர், ராணுவத்தினர் மேற்கொண்ட நிவாரண பணிகளுக்கும் மாநில அரசுதான் அனைத்து செலவையும் வழங்க வேண்டும் என்று தெரி வித்தார்.
2018ஆம் ஆண்டு நிகழ்ந்த கனமழை வெள்ளப் பெருக்கு பேரிடரின் போது மீட்புப் பணிக்கு வந்த இந்திய விமானப் படைக்கு 102 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும், அப்போது ஒன்றிய அரசு வழங்கிய அரிசிக்கு 205 கோடி ரூபாய் மாநில அரசு வழங்கியதாகவும் கூறினார்.
இதேபோன்று, வயநாடு மீட்பு பணிக்கு வந்த விமானப்படை ஹெலிகாப்டர்களுக்கும், ராணுவத்தினரின் அனைத்து செலவுகளுக்கும் மாநில அரசுதான் பணம் வழங்க வேண்டும் என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.