லண்டன், செப்.23 ஒரு காலத்தில் உலகில் பாதி நாடுகளை தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்த நாடு தான் இங்கிலாந்து. லண்டனை தலைமையிடமாக கொண்ட இங்கிலாந்து தற்போது மிகப்பெரும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது.
கடும் நிதி நெருக்கடி காரணமாக மற்ற நாடுகளிலிருந்து அதிகம் கடன் வாங்கும் நிலைக்கு இங்கிலாந்து தள்ளப் பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் ரூ.1 லட்சத்து 52,304 கோடி கடனாக வாங்கியுள்ளது இங்கிலாந்து. இந்த தொகை கடந்த ஆண்டை விட ரூ.36,686 கோடி அதிகம் என பிரிட்டன் தேசிய புள்ளி விவர அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த கடன் தொகை, இங்கிலாந்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100% ஆகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான மதிப்பிற்கு இணையாக கடன் பெற்று வருகிறது இங்கிலாந்து. இந்த நிலையால் அங்குள்ள மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் சிலர் நாட்டை விட்டு வெளியேறவும் தயாராகி வருகிறார்கள். நிதி நிலைமை இப்படி இருக்க, வரும் நிதி நிலை அறிக்கை மிகவும் கசப்பானதாக இருக்கும் என்றும், மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.