ராகுல் காந்தி : உச்சநீதிமன்றம் ‘ஸ்டே’ – நிறுத்தி வைப்பு பிஜேபி ஆட்சிக்கு மிகப் பெரிய அடி!

Viduthalai
7 Min Read

அதிகபட்ச தண்டனை வழங்கியுள்ள விசாரணை நீதிமன்றம் காரணத்தை குறிப்பிடவில்லை : உச்சநீதிமன்றம்

அரசியல்

புதுடில்லி, ஆக.5 – குற்றவியல் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2  ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கியுள்ள விசாரணை நீதிமன்ற நீதிபதி அதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை என்பதுடன், 2 ஆண்டு சிறைத் தண்டனையால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ராகுல் காந்தி மட்டு மன்றி, அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் உரிமையும் பாதிக்கப்படு கிறது என்பதையும் கருத்தில் கொண்டு  இந்த இடைக்கால உத்தரவைப் பிறப் பிப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். 

பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா மற்றும் சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு மூலம், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தக்க வைக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி, அவர் நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடரி லேயே நாடாளுமன்ற விவாதங் களில் கலந்துகொள்வதற்கான சூழலும் ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து உடனடியாக மக்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதப்படும் என்றும், கடிதம் உட னடியாக ஏற்கப்பட்டால் வரும் திங்கட் கிழமையே (7.8.2023) ராகுல் காந்தி நாடாளுமன்ற நடவடிக் கைகளில் கலந்து கொள்வார் என்றும் காங்கிரஸ் கட்சியின் மக்கள வைக் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த இந்த வழக்கை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு  உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. அதற்குள் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்யுமாறும் உத்தர விட்டிருந்தது. அதனடிப்படையில் பிர மாணப் பத்திரம் தாக்கல் செய்த ராகுல் காந்தி, “அவதூறு வழக்கில் நான்  குற்றவாளி இல்லை. நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்பதால் மன்னிப்புக் கோர முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் முன்னதாகவே செய்திருப்பேன். எனவே, எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றக் கூட்ட த்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார். அதே போல “ராகுல் காந்தி அவரது பேச்சு க்கு எந்த வருத்தமும் தெரிவிக்க வில்லை. அவர் மன்னிப்பு எதுவும் கோரவில்லை என்பதால் அவரது தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் மீது வழக்கு தொடுத்திருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் புர்ணேஷ் மோடி தனது பிரமாணப் பத்திரத்தில் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா மற்றும் சஞ்சய் குமார்  அடங்கிய அமர்வு முன்பு நேற்று (4.8.2023) வழக்கு விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தி தரப்பில் மூத்த  வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி-யும், பூர்ணேஷ் மோடி தரப்பில் மகேஷ் ஜெத்மலானியும், ஒன்றிய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா வும் ஆஜராகி வாதங்களை வைத்தனர்.

அரசியல்

தீர்ப்பு விபரம்

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, தனது தீர்ப்பை வழங்கியது. அதில், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. “விசாரணை நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் (2 ஆண்டு சிறைத்தண்டனை) விளைவுகள் அதிகபட்சமாக உள்ளது. அந்த தீர்ப்பு ராகுல் காந்தி பொது வாழ்வில் தொடர்வதற்கான உரி மையை மட்டுமின்றி, அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களையும் பாதித்துள்ளது. ராகுல் காந்தி வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது ஏன்  என்பதற்கு தீர்ப்பளித்த நீதிபதி எந்தக்  காரணத்தையும் கூறவில்லை. தண்டனைக் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நாள் குறைவாக தந்திருந்தாலும் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருக்க மாட்டார்.  எனவே, இறுதித் தீர்ப்பு வரும் வரையில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது” என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. 

நீதிபதி கூற்று

குஜராத்திலிருந்து வரும் தீர்ப்புகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன என்று,  ராகுல்காந்தி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் எள்ளி நகையாடினார்.  இந்த வழக்கில் தீர்ப்பளித்த போது அவர் மேலும் கூறியதாவது: “(ராகுலுக்கு வழங்கப்பட்ட) தண்டனை யைப் பொறுத்தவரை, சில காரணிகளைக் கருத்தில் கொண்டுள்ளோம். – இந்திய தண்ட னைச் சட்டப் பிரிவுகள் 498 & 499 IPC தண்ட னைக்குரிய குற்றத்தின் உள்ளடக்கங்கள் அதிகபட்சம் 2 ஆண்டுகள் அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வழிவகை அளிக்கிறது. வழக்கை விசாரித்த (சூரத்) நீதிபதி அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையைத் தவிர, விசாரணை நீதிபதியால் இதற்கு வேறு எந்த காரணத்தையும் வழங்க முடியவில்லை.  ஒரு நாளைக்குப் பல பொதுக்கூட்டங் களில் உரையாற்றும் அரசியல்வாதிகளுக்கு அவர்களின் பேச்சுகளே நினைவில் இருப்ப தில்லை. நீங்கள் அதிகபட்ச தண்டனையை விதிக்கும்போது, அதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்து விசார ணை நீதிமன்றம் எந்தவொரு காரணத்தை யும் சுட்டிக் காட்டவில்லை. ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தொகுதி ஒட்டுமொத்த மாகப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகிறது. இதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு தனிநபரின் உரிமையை மட்டுமல்ல, முழுத் தொகுதியின் உரிமையையும் பாதிக்கிறீர்கள். அந்த ‘கற்றறிந்த’ தனி நீதிபதி, ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலேயே சலுகை வழங்க முடியாது என்கிறார். அதேநேரம் இந்த தண்ட னைக்கான மற்ற காரணங்கள் குறித்து அவர் எதையும் சொல்லவில்லை.

ராகுலுக்கு அறிவுரை

இந்த அதிகபட்ச தண்டனையின் காரண மாக மட்டுமே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகள் (எம்.பி. பதவி பறிப்பு) நடை முறைக்கு வந்துள்ளன. தண்டனை ஒரு நாள்  குறைவாக இருந்திருந்தால், இந்த விதிகள் வந்திருக்காது. மேல்முறையீட்டில், உயர்நீதி மன்றம் தண்டனை மீதான தடையை நிரா கரித்து ஏராளமான பக்கங்களைச் செல வழித்தாலும், இந்த அம்சங்கள் அவர்களின்  உத்தரவுகளில் கணக்கில் கொள்ளப்பட வில்லை. ராகுல் காந்தி பேச்சு நல்ல ரசனை இல்லை என்பதும் உண்மைதான் அதேநேரம், (ராகுல் காந்தி பேசியது) நல்ல  ரசனை இல்லாத வார்த்தைகள் என்பதில் சந்தேகம் இல்லை. பொது வாழ்வில் இருப்ப வர், பொதுப் பேச்சுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு மனுவில் அவரது பிரமாணப் பத்திரத்தை ஏற்கும் போது, இந்த நீதிமன்றம் கவனித்த படி, அவர் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஒருவேளை மனுதாரர் இந்த வார்த்தை களை கூறுவதற்கு முன்பு, முந்தைய வழக்குகளில் ஒரு முடிவு வந்திருந்தால், அவதூறானதாகக் கூறப்படும் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அவர் மிகவும் கவனமாக இருந்திருப்பார். பொது வாழ்வில் தொடருவது தொடர்பான விவ காரத்தைப் பொறுத்தவரை, மனுதாரர்களின் உரிமை மட்டுமல்ல, அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் உரிமையும் பாதிக்கப்படு கிறது. எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டும் அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு விசாரணை நீதிபதியால் எந்தக் காரணமும் கூறப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டும், இறுதித் தீர்ப்பு வரும் வரை,  தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்திருந்தது. இதனை எதிர்த்து தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த  ஜூலை 7-ஆம் தேதி நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று (4.8.2023) ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. 

காங்கிரஸ் தலைவர் கார்கே

இந்த உத்தரவுக்குப் பின்னர், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஏஎம்சிங்வி, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, “இன்று (4.8.2023) மிகவும் மகிழ்ச்சிகரமான நாள். ஜனநாயகம் வென்றுள்ளது. அரசியல் சாசனம் வென்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முடிவினை நான் வரவேற்கிறேன். இது ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி மட்டும் இல்லை. இது இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி. உண்மைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்று நாட்டு மக்களைச் சந்தித்துள்ளார். அவர்களின் வாழ்த்துகள் நம்முடன் உள்ளது.

ராகுல் காந்தியை தகுதி இழப்பு செய்வதற்கு 24 மணி நேரமே ஆனது. இனி அவரை பதவியில் மீண்டும் அமர்த் துவதற்கு எத்தனை நாளாகும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இது மக்களின் வெற்றி, வாக்காளர்களின் வெற்றி, இது வயநாடு மக்களின் வெற்றி” என்று கார்கே தெரிவித்தார் 

ராகுல்காந்தி

அவரைத் தொடந்து பேசிய ராகுல் காந்தி, “நன்றி கார்கே ஜி… இன்று இல்லை என்றாலும், நாளை இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் வாய்மை வென்றே தீரும். எனது இலக்கு எனக்குத் தெரியும். நான் என்ன செய்யவேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். இந்த விவகாரத்தில் உறுதுணையாக நின்ற, எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி. பொதுமக்கள் காட்டும் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி” என்று   பேசினார். முன்னதாக, உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த ராகுல் காந்தி, ‘எது நடந்தாலும் எனது கடமை ஒன்றே… இந்தியாவின் எண்ணத்தை பாதுகாப்பது’ என்று தெரிவித்திருந்தார். இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மூலம் தகுதியிழப்புக்கு ஆளான ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.யாக முடியும் என்பதால் இந்தத் தீர்ப்பு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *