புதுடில்லி, செப். 14- தமிழ் நாட்டுக்கு உரிய காவிரி நீரை கரு நாடகம் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியது.
காவிரி ஒழுங்காற்றுக்குழு வின் 103ஆவது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டில்லியில் இருந்து காணொலி வாயி லாக 12.9.2024 அன்று நடைபெற்றது.
இதில் சம்பந்தப்பட்ட 4 மாநில நிர்வாகிகளும் அவர்களது தலைமையிடத்தில் இருந்து கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு சார்பில் அரசு உறுப்பினரும், திருச்சி மண்டல தலைமைப் பொறியா ளருமான ஆர்.தயாளகுமார் திருச்சியில் இருந்தும். பிற அதிகாரி கள் சென்னையில் இருந்தும் பங் கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும் 4 மாநில நீர் தரவு விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
பின்னர் தண்ணீர் விநியோகம் பற்றி பேசும்போது, கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை பிலிகுண்டுலுவில் கருநாடகம் தரவேண்டிய 98.633 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக 191.660 டி.எம்.சி. தண்ணீர் பெறப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு உறுப்பினர் தெரிவித்தார். மேலும் மேட்டூர் அணையில் 11ஆம் தேதி நிலவரப்படி 84.431 டி.எம்.சி. தண்ணீர் இருப்பதாகவும், அணையில் இருந்து 23 ஆயிரத்து 674 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
அதே காலக்கட்டத்தில் காவிரிப் படுகையில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது என்றும், ஆனால் அடுத்த 2 வாரத்துக்கு இயல்பை விட குறைவாகவே மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு உறுப்பினர், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வருகிற மாதங்களில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை பிலி குண்டுலுவில் திறந்து விடுவதை கருநாடகம் உறுதி செய்ய பரிந்துரைக்க வேண்டும் என கேட்டார். அதுபோல செய்யுமாறு குழு தலைவர் வினீத் குப்தா கருநாடக அதிகாரிகளை வலியுறுத்தினார். பின்னர் கூட்டத்தின் வேறு சில பொருட்கள் குறித்து
விவாதிக்கப்பட்டன. குழுவின் அடுத்த கூட்டத்தை வருகிற 25 அல்லது 26ஆம் தேதி நடத்திக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.