சென்னை, செப். 14- ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இணையவாசிகள் பலரும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் முன்னணியினர் மக்களவை உறுப்பினர் கனிமொழி, ஜோதிமணி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிக உரிமையாளர், அமைச்சரிடம் ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்கும்போது, அவரது கோரிக்கை ஆணவத்துடனும் அவமரியாதையுடனும் எதிர்கொள்ளப்படுகிறது.
ஒரு பெரும் பணக்கார நண்பர், விதிகளை சரிசெய்ய, சட்டங்களை மாற்ற அல்லது பொதுச் சொத்துக்களைப் பெற முற்படும்போது, மோடி சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்.
ஆனால் பணமதிப்பிழப்பு, வங்கிகளை அணுக முடியாமை, வரி பறிப்பு, பேரழிவு தரும் ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கெனவே சகித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாக அவர்கள் இப்போது அவமானப்படுத்தப்படுகிறார்கள்.
ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்களின் பலவீனமான அகங்காரம்(ஈகோ) புண்படுத்தப்படும்போது அவர்கள் எதிர் தரப்பினரை அவமானப்படுத்துவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றனர். இந்த திமிர்பிடித்த அரசாங்கம், மக்கள் சொல்வதைக் கேட்டால், ஒரே வரி விகிதத்திலான எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்பதை புரிந்துகொள்வார்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பிலும் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அன்னபூர்ணா உணவு விடுதி நிறுவனரை மன்னிப்பு கேட்க வைத்தது – அதிகார ஆணவத்தின் உச்சம்! மோடியின் நண்பர்களுக்கு வரி குறைப்பு, ஏழை, நடுத்தர மக்களுக்கு வரி அதிகமாக உள்ளது. அத்தியாவசிய பொருள்களுக்கு ஒரேமாதிரியான எளிமையான ஜிஎஸ்டி வேண்டும் என்பதை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இதனிடையே, அன்னபூர்ணா நிறுவனர் மன்னிப்பு கேட்ட காட்சிப் பதிவை பாஜகவினர் வெளியிட்டதற்கு தமிளழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதிமுக சார்பில் கண்டனம்
அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரிய காட்சிப்பதிவை பாஜகவினர் வெளியிட்ட செயலுக்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்ட நிலையில் பாஜகவின் செயல் கீழ்த்தரமானது என அதிமுக மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம் செய்துள்ளார்.